ஈரோடு, ஜூன் 30: ஈரோட்டில் 14 வயது சிறுமியிடம் அந்தரங்க உறுப்புகளை காட்டி ஆபாச சைகை செய்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது சிறையில் அடைத்தனர். ஈரோட்டை அடுத்த கஸ்பாபேட்டை பகுதியில் அரசு பள்ளியில் பயிலும் 14 வயது சிறுமி பள்ளி முடிந்து, கடந்த 25ம் தேதி மாலை வீட்டுக்கு சென்றார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நின்று இருந்த ஒருவர், சிறுமியிடம் ஆபாச சைகை செய்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர், சிறுமி தெரிவித்த அங்க அடையாளங்களுடன் இருந்த நபரை பிடித்து அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அந்த நபர் உண்மையை ஒப்புக்கொண்டார். அவர், ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறை தொட்டிபாளையத்தை சேர்ந்த சித்தார்த் (25), என்பதும் வீடு, கடை, அலுவலகங்களில் இன்டீரியர் வேலை செய்பவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, சித்தார்த்தை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
