ஈரோடு, ஜூலை 3: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்வதில் மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. மாநகராட்சி நிர்வாகம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து எடுத்து செல்வதற்கு தூய்மை பணியாளர்களை பயன்படுத்தினாலும், நகர் பகுதிகள், கடைவீதி, மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், ஊர்களின் எல்லைப்பகுதிகள் மக்கள் வாழக்கூடிய இடங்களில் தண்ணீர் பாட்டில்கள், பாலிதீன் பைகள், அட்டைகள், செராமிக்ஸ், பிளாஸ்டிக், கண்ணாடி பொருட்கள் என அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே மலைபோல் குவிக்கப்படுகிறது.
தூய்மை பணியாளர்கள் வீடு தோறும் வந்து இந்த கழிவுகளை சேகரித்தாலும் மக்கள் ஆங்காங்கே தூக்கி வீசி விட்டு செல்வதால் அவை சாலை ஓரங்களில் ஆங்காங்கே குவியலாக குவிந்து கிடக்கிறது. இவற்றை சேகரிப்பதில் தூய்மை பணியாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு குப்பை சேகரிக்கும் தள்ளுவண்டிகள், மோட்டார் வாகனங்கள் மூலம் இயங்கும் வசதி உள்ள வண்டிகள் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளதால் சேகரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆங்காங்கே இந்த மக்காத குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டி தீ வைத்து விட்டு செல்கின்றனர்.
குறிப்பாக, மாநகராட்சிக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
