ஈரோடு, ஜூலை 2: கடந்த திமுக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால், ஈரோடு மாநகராட்சி பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 17 ஆயிரத்து 226 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஈரோடு மாநகராட்சி பள்ளிகளில் 2026-2027-ம் கல்வி ஆண்டுக்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் காலை, மதிய உணவு திட்டம், பாடப்புத்தகம், சீருடை, காலனி உள்பட அனைத்து வகை இலவச திட்டங்களையும் வீடு வீடாக சென்று பெற்றோர்களை சந்தித்து ஆசிரிய-ஆசிரியைகள் விளக்கிக்கூறி மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, கடந்த திமுக அரசின் காலை உணவு திட்டம் மற்றும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் டாக்டருக்கு படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டினர். இதனால், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. ஈரோடு மாநகராட்சி அரசு பள்ளிகளில் மட்டும் 17 ஆயிரத்து 226 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மான்விழி கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் 65 பேரும், யு.கே.ஜி. வகுப்பில் 139 பேரும், 1-ம் வகுப்பில் 783 பேரும், 2-ம் வகுப்பில் 1,074 பேரும், 3-ம் வகுப்பில் 1,190 பேரும், 4ம் வகுப்பில் 1,179 பேரும், 5ம் வகுப்பில் 1,442 பேரும் சேர்ந்துள்ளனர். 6-ம் வகுப்பில் 1,441 பேரும், 7-ம் வகுப்பில் 1,497 பேரும், 8-ம் வகுப்பில் 1,678 பேரும், 9-ம் வகுப்பில் 1,672 பேரும், 10-ம் வகுப்பில் 1,737 பேரும், 11-ம் வகுப்பில் 1,692 பேரும், 12-ம் வகுப்பில் 1,638 பேரும் என மொத்தம் 17 ஆயிரத்து 226 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
இதேபோல், இந்த கல்வி ஆண்டில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 9 ஆயிரத்து 467 மாணவ, மாணவிகளும் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
