×

பத்தாண்டு கால போராட்டத்திற்கு தீர்வு: பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் துவக்கம்

 

அந்தியூர், ஜூலை 6: அந்தியூர் அருகே பட்லுர் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள ஆற்று நீர் கேட் வால்விலிருந்து வெளியேறும் குடிநீரை பிடித்து சென்று இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். குடிநீருக்கு சிரமப்பட்ட பொதுமக்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, காவிரியாற்று குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஆற்றுக்குடிநீர் சப்ளை செய்யும் பணியில், அம்மாபேட்டை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பணி நிறைவடைந்து பெருமாள் நகரிலுள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஆற்று நீர் ஏற்றப்பட்டது. பெருமாள்நகர் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியதையடுத்து, நேற்று வெள்ளித்திருப்பூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மேல்நிலைத் தொட்டி பைப் லைன் வழியாக மக்களின் பயன்பாட்டுக்கு தண்ணீரை திறந்து வைத்தார். இதில் பவானி தொகுதி விசிக மாவட்ட செயலாளர் வக்கீல் சுரேஷ், செந்தில், ராஜா, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Anthiyur ,Perumalnagar ,Patlur panchayat ,Vellithirpur… ,
× RELATED கொடுமுடி பஸ் நிலையம் அருகே தீ விபத்து