- யூனியன் அரசு
- ஈரோடு
- அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்களின் உரிமைகளுக்கான சங்கம்
- ஈரோட் கலெக்டரேட்
ஈரோடு, ஜூலை 2: ஈரோட்டில் ஒன்றிய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 17 பெண்கள் உட்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று ஒன்றிய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்ததால், நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் டவுன் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா மற்றும் எஸ்ஐக்கள், போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், போலீசாரின் தடையை மீறி சங்கத்தின் நிர்வாகி செந்தில்குமார் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை, விபிஜி ராம்ஜி என்று பெயர் மாற்றம் செய்து 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க திட்டமிடும் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகம் முன் மாற்றுத்திறனாளிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 17 பெண்கள் உட்பட 35 பேரை போலீசார் கைது திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில், நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளை மட்டும் போலீசார் அவர்களது வாகனத்திலேயே மண்டபத்திற்கு வர அனுமதித்தனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
