எச்ஐவி கண்டறிய தீவிர சோதனை

 

கோவை,ஜூன் 23: கோவை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எய்ட்ஸ், எச்ஐவி பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு சொசைட்டி மூலமாக மாவட்ட அளவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருவிகள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. சுகாதார நிலையங்களில், கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்திற்கு முன் எச்ஐவி பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்க உத்தரவிடப்பட்டது. தாய் சேய் நலன் கருதி இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தீவிர காச நோய் பாதிப்பு உள்ளவர்கள், நோய் பாதிப்பு அறிகுறி இருப்பவர்களுக்கு எச்ஐவி பரிசோதனை செய்யப்படும். மேலும் நோயாளிகளின் சம்மதத்தின் பேரில் சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாவட்ட அளவில் நடப்பாண்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு எச்ஐவி சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, அன்னூர் வட்டாரங்களில் எச்ஐவி பாதிப்பு உள்ளவர்கள் கணிசமாக இருப்பதாக தெரிகிறது.

இந்த பகுதியில் நோய் பரவல் தடுக்க தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும் என எய்ட்ஸ் கட்டுபாட்டு சொசைட்டியினர் தெரிவித்தனர். நோயாளிகளின் எண்ணிக்கை கூடியுள்ளதா, குறைந்து விட்டதா, நோயாளிகள் கூட்டு மருந்து சிகிச்சை பெறுகிறார்களா எனவும் அரசு மருத்துவமனைகளின் மூலமாக ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Related Stories: