கோவை, ஜூன் 15: கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏற்படும் நெரிசலைக்குறைக்க கடந்த 2021ம் ஆண்டு அதற்கு எதிரே புதிய மலர் சந்தை வளாகம் அமைக்கப்பட்டது. இது 90க்கும் மேற்பட்ட கடைகளுடன் கட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவிட் கால கட்டத்தில் மக்களின் நெரிசலை குறைக்கும் வகையில் இது பயன்பாட்டுக்கு வந்தது. பழைய பூ மார்க்கெட்டில் கடை போட்டிருந்த வியாபாரிகள் புதிய மார்க்கெட்டில் வியாபாரம் செய்தனர். அதே நேரத்தில், பழைய பூ மார்க்கெட் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வியாபாரிகள் அனைவரும் பழைய மார்க்கெட்டுக்கே திரும்ப சென்று விட்டனர்.
இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய பூ மார்க்கெட் வளாகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் பராமரிப்பின்றி கிடப்பதால், சில குடிமகன்கள் இரவு நேரத்தில் மது குடித்து விட்டு பாட்டில்களை போட்டு விட்டு செல்கின்றனர். இதனால், பாட்டில்கள் மற்றும் குப்பை கூளங்களாகவும், செடி, புற்கள் சூழ்ந்தும் மார்க்கெட் காட்சி அளிக்கிறது. கேட் போட்டு மூடி வைத்திருந்தாலும், சிலர் இரவில் உள்ளே ஏறி குதித்து சமூக விரோதிகளின் செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. மேலும் கேட் மற்றும் சுற்றுப்புற இரும்பு கம்பிகள் துருப்பிடித்த நிலையில் உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘பயன்படுத்தப்படாமல் உள்ள இந்த இடத்தை காய்கறி சந்தையாகவோ அல்லது வணிக வளாகமாக மாற்றவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்’’. என்றனர். இது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, வருவாய் ஈட்ட கூடிய வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
