கோவை,ஜூன்15: மீன் பிடி தடைகாலம் காரணமாக கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் ஒரு கிலோ வஞ்சிரம் ரூ. 1700-க்கு விற்பனையானது. கோவை உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டுக்கு கேரளா,ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மீன் பிடி தடைகாலம் என்பதால் வரத்து குறைத்து மீன்களின் விலை அதிகமாக இருந்தது. இருப்பினும் மீன் பிரியர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘ கடந்த 2 மாதமாக மின் பிடி தடை காலம் அமலில் இருந்ததால், வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது.
நேற்று நள்ளிரவு முதல் மீன் பிடி தடைகாலம் முடிவடைந்தது. இதனால் கடலுக்குள் அனைத்து ரக படகுகளில் சென்று மீன் பிடிக்க எந்த தடையும் இல்லை. எனவே வரும் நாட்களில் மீன்கள் விலை குறைய அதிக வாய்ப்புள்ளது’’. என்றனர். நேற்று உக்கடம் மார்க்கெட்டில் விற்ற மீன்களில் விலை விவரம் (ஒரு கிலோவில்), பாறை – 800, நெத்திலி – ரூ. 250,ஊளி – ரூ.650, மத்தி – ரூ.250, கிழங்கா – ரூ.300, விளமீன் – ரூ.800,கட்லா – ரூ.200, நெய் மீன் – ரூ.180, ரோகு – ரூ.200,ஜிலேபி – ரூ. 150, சங்கரா – ரூ.500, நண்டு – ரூ.800, இறால் – ரூ.600, வஞ்சிரம் – ரூ. 1700-க்கு விற்பனை செய்யப்பட்டது.
