தர்மபுரி, ஜூன் 22: தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் அத்துமீறல்கள் மற்றும் கொடூரமான படுகொலைகளை கண்டித்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தர்மபுரியில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. வேல் பால் டிப்போ அருகே தொடங்கி பேரணி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நிறைவடைந்தது. பின்னர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் இஸ்மாயில் தொடங்கி வைத்தார். மாநில துணை தலைவர் தாவூத் கைஸர் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் இப்ராஹீம் தீர்மானங்கள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், மேகதாது அருகே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், தமிழகத்தின் உரிமைகளை காக்கும் வகையில் அனைத்து எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஒன்று சேர்ந்து மேகதாது அணையின் மூலமாக, தமிழகத்திற்கு வரும் ஆபத்துகளை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ததின் காரணத்தினால், மன உளைச்சலுக்கு ஆளாகி பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு உள்ளனர். இதற்கு காரணமான ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இஸ்லாமிய சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட துணை தலைவர் பாபுபாய் நன்றி கூறினார்.
