போச்சம்பள்ளி, ஜூன் 22: தேங்காய் விலை சரிந்துள்ள நிலையில், தென்னை மட்டைகள் விலை உயர்ந்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், நெடுங்கல், அகரம், மருதேரி, பாரூர், அரசம்பட்டி, பண்ணந்தூர், புலியூர், மஞ்சமேடு, வாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 36 ஆயிரம் ஏக்கர் பரப்பில், 15 லட்சம் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட தேங்காய் மண்டிகள் உள்ளன. இங்கு தேங்காயை உரித்து விற்பனை செய்கிறார்கள். மேலும் தேங்காய் மட்டையை லோடு கணக்கில் விலைக்கு வாங்கி வெயிலில் காய வைத்து, பதப்படுத்தி இயந்திரம் மூலமாக நார் பிரித்து எடுத்து அதனை விற்பனை செய்கிறார்கள். நார்களை வாங்கி சென்று மெத்தை தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதனால் நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.
தற்போது தேங்காய் விளைச்சல் அதிகரிப்பால், விலை குறைந்துள்ளது. இதனால், விற்பனைக்கு அனுப்பாமல் மலை போல் விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர். இதனிடையே, கயிறு தயாரிக்க பயன்படுத்தும் தேங்காய் மட்டைகள் விலையும் உயர்ந்துள்ளது. போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. நார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு, நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் மட்டைகள் தேவைப்படுகிறது. தற்போது தேங்காய் விலை குறைந்துள்ள நிலையில், தேங்காய் உரிப்பு வெகுவாக குறைந்து வருவதால், தேங்காய் மட்டைகள் தேவை அதிகரித்து உள்ளது. இதனால், விலை உயர்ந்துள்ளது.
