விவசாயி மீது தாக்குதல்

 

காரிமங்கலம், ஜூன் 22: காரிமங்கலம் அருகே வழித்தட பிரச்னை தொடர்பாக விவசாயி மீது தாக்குதல் நடத்திய தாத்தா, பேரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கொட்டுமாரனஅள்ளி ஊராட்சி கிட்டேசம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்(51).  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முனியப்பன்(56) என்பவருக்கும் இடையே, பொது வழித்தடம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மேற்கண்ட வழித்தடத்தில் முனியப்பன் கொட்டாய் அமைக்க முயன்றுள்ளார்.

இதற்கு மாரியப்பன் எதிர்ப்பு தெரிவிக்கவே, இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில், முனியப்பன் மற்றும் அவரது பேரன்கள் திவாகர்(20), ஜெய்தீபன்(19) ஆகியோர் இரும்பு கம்பியால், மாரியப்பனை தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த மாரியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து மாரியப்பன் மனைவி வாணி கொடுத்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாத்தா மற்றும் பேரன்களை கைது செய்தனர்.

Related Stories: