இஸ்லாமாபாத்: சிந்து நதி நீர் முழுமையாக தடுக்கப்பட்டால் இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க தயங்க மாட்டோம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறி உள்ளார். கடந்த ஆண்டு பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதன் காரணமாக, பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், செனாப் நதியில் புதிய அணை கட்ட இந்தியா திட்டமிட்டு வருகிறது. அதோடு, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு சிந்து நதி நீர் கிடையாது என சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்த நிலையில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் 2028 ஜூனுக்குள் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீர் முழுமையாக நிறுத்தப்படும் என்று ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ‘‘தண்ணீரும் எங்களது தேசிய பாதுகாப்பின் ஒருபகுதி. அதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்தியாவிற்கு எதிராக போருக்கு செல்ல எவ்வித தயக்கமும் காட்ட மாட்டோம். சிந்து நதிநீரை இந்தியாவிற்கு திருப்பி விடுவதற்காக எல்லையில் கட்டப்படும் எந்தொவரு புதிய நீர் கட்டமைப்புகளும் அழிக்கப்படும்’’ என மிரட்டி உள்ளார்.
