நியூயார்க்: புகைப்படம் எடுக்க மெலோனி என்னிடம் திரும்பத்திரும்ப கேட்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டி உள்ளார். பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது, இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி என்னிடம் புகைப்படம் எடுக்க கெஞ்சினார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த மெலோனி, இத்தாலியும், நானும் யாரிடமும்,ஒருபோதும் கெஞ்சுவதில்லை என்று தெரிவித்தார். இந்த மோதல் வைரலான நிலையில் மெலோனிக்கு டிரம்ப் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார். அதில் என்னிடம் புகைப்படம் எடுக்க மெலோனி மீண்டும் மீண்டும் கெஞ்சினார் என்று தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் டிரம்ப் கூறியிருப்பதாவது: ஜி7 உச்சிமாநாட்டின் போது மெலோனி என்னிடம் திரும்பத் திரும்ப புகைப்படம் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டார். இத்தாலியில் மெலோனியின் செயல்பாடு அல்லது செல்வாக்கு மந்தமாக இருப்பதால் அவர் இத்தகைய உத்திகளை நாடுகிறார். இத்தாலியை உண்மையாகவே நேசித்து பாதுகாக்கும் நாடான அமெரிக்காவின் கோரிக்கையை அவர் நிராகரித்ததால், இத்தாலியில் அவரது செல்வாக்கு குறைந்திருக்கலாம். ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதையோ அல்லது உருவாக்குவதையோ தடுப்பது தொடர்பான விவகாரத்தில் அவர் அமெரிக்காவை நிராகரித்தார். சொல்லப்போனால் நேட்டோவும் அப்படித்தான் செய்தது. இத்தாலியையும், நேட்டோ கூட்டாளிகள் என்று அழைக்கப்படும் பிற நாடுகளையும் பாதுகாக்க அமெரிக்கா ஆண்டுதோறும் பல நூறு பில்லியன் டாலர்களைச் செலவிடுகிறது. அப்படியிருந்தும், இத்தாலியின் விமானத் தளங்களையோ அல்லது ஓடுபாதைகளையோ பயன்படுத்த அவர் எங்களை அனுமதிக்கவில்லை; இது பெரும் தளவாடச் சிக்கலை ஏற்படுத்தியது. இப்போது, அமெரிக்கா ஈரானை ராணுவ ரீதியாகத் தோற்கடித்த பிறகு, தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்வதற்காக அவர் மீண்டும் நட்புறவை விரும்புகிறார். வேண்டாம், நன்றி. இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
உங்க வேலையை பாருங்க.. மெலோனி பதிலடி
தன்னிடம் புகைப்படம் எடுக்க மெலோனி மீண்டும் மீண்டும் கெஞ்சியதாக டிரம்ப் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மெலோனி உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஜி7 உச்சிமாநாட்டின் போது நான் மீண்டும் மீண்டும் புகைப்படம் எடுக்கக் கோரியதாக அமெரிக்க அதிபர் கூறிய என் மீதான இத்தகைய தொடர்ச்சியான மற்றும் தேவையற்ற தாக்குதல்கள் அர்த்தமற்றவை. அதிபர் டிரம்ப் அவர்களே, எனது செல்வாக்கைப் பொறுத்தவரை, உங்கள் நண்பராக இருப்பது அதற்கு எந்த வகையிலும் உதவவில்லை. அது உங்களுடனான எனது உறவையும் சார்ந்திருக்கவில்லை. எனது செல்வாக்கு என்பது இத்தாலியின் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் எனது திறனைச் சார்ந்ததே. அதைத்தான் நான் எப்போதும் செய்து வருகிறேன். இத்தாலியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் விஷயத்திலும் நான் அதையே செய்தேன். அவற்றின் பயன்பாடு ஒப்பந்தங்களால் நிர்வகிக்கப்படுகிறது. அவற்றை நாங்கள் எப்போதும் மதித்து வந்துள்ளோம். நான் பிரதமராக இருக்கும் வரை அவை மீறப்படாது. இத்தாலி ஒரு இறையாண்மை கொண்ட நாடு. எது எப்படியாயினும், எனது செல்வாக்கு என்பது உங்கள் கவலைக்குரிய விஷயம் அல்ல. உங்கள் சொந்த செல்வாக்கில் கவனம் செலுத்துமாறு நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
