லண்டன்: மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சி பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளார். இங்கிலாந்தில் கடந்த வாரம் நடந்த மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில், ஆளும் ரிஃபார்ம் யூகே கட்சிக்கு எதிராக தொழிலாளர் கட்சியின் ஆண்டி பர்ன்ஹாம் இமாலய வெற்றியைப் பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமைக்கு எதிராக அக்கட்சிக்குள் அதிருப்தி கிளம்பியது.
நாடாளுமன்ற தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 201 எம்பிக்கள் ஆண்டி பர்ன்ஹாமிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், பிரதமர் கீர் ஸ்டார்மர் சபையின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கருதப்பட்டது. இது மொத்த எம்பிக்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் அதிகம் என்பதால், தற்போதைய பிரதமர் பதவியில் நீடிப்பது அரசியல் ரீதியாக சாத்தியமற்றது என்ற நிலை கடந்த சில நாட்களாக நிலவி வந்தது. தற்போது எழுந்துள்ள கடும் நெருக்கடியைத் தொடர்ந்து, தனது பதவி விலகல் குறித்த தேதியை விரைவில் கீர் ஸ்டார்மர் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, எட் மிலிபண்ட், ஷபானா மஹ்மூத் மற்றும் யுவெட் கூப்பர் போன்ற அமைச்சர்கள் கீர் ஸ்டார்மரை உடனடியாக பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தொழிலாளர் கட்சி மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘பிரதமர் கீர் ஸ்டார்மர் நாட்டின் நலன் கருதி கண்ணியமான முறையில் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்’ என்றார்.
