ஈரோட்டில் பொறியியல் கல்லூரியில் தேர்வு அறையிலேயே மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை: போட்டிக்கு அழைத்து சென்று மாணவியிடம் பிடி ஆசிரியர் சில்மிஷம்

ஈரோடு: ஈரோடு அடுத்த மேட்டுக்கடையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் 19 வயது மாணவிக்கு தேர்வு அறையிலேயே பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு அடுத்துள்ள திண்டல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருபவர் ராஜாராம் கிருஷ்ணமூர்த்தி (47). இவர், மேட்டுக்கடையில் உள்ள தனியார் பொறியியில் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்த செமஸ்டர் தேர்வுக்கு கண்காணிப்பாளராக சென்றார்.

அப்போது, அங்கு தேர்வு எழுதிய அதே கல்லூரியை சேர்ந்த 19 வயது மாணவியிடம் தேர்வு அறையிலேயே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர், பேராசிரியர் ராஜாராம் கிருஷ்ணமூர்த்தியை பிடித்து, ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பேராசிரியர் ராஜாராம் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். தேர்வு அறையிலேயே மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிடி ஆசிரியர் கைது: புதுக்கோட்டை கணேஷ்நகரை சேர்ந்தவர் ஆமோஸ் தேவசகாயம் (52). கந்தர்வக்கோட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர். இவர், கடந்த பிப்ரவரி 22ம் தேதி புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிக்கு மாணவிகளை அழைத்து சென்றுள்ளார்.

போட்டிகள் முடிந்து 15 வயதான மாணவியையும், அவரது தோழியான சக மாணவியையும் காரில் அழைத்து சென்றுள்ளார். முன்சீட்டில் அமர்ந்து இருந்த 15 வயதான மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்த தோழி மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து உடற்கல்வி ஆசிரியர் ஆமோஸ் தேவசகாயத்தை நேற்று கைது செய்தனர்.

Related Stories: