பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்த புரத்தில் பழுதடைந்த சமுதாய நலக்கூடத்தை புனரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் தேர்வுநிலை பேரூராட்சி 7வது வார்டு விவேகானந்த புரத்தில் பட்டியலினத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் சுப நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக கடந்த 2007ம் ஆண்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இதில் பட்டியலின மக்கள் தங்கள் இல்லத்தின் திருமணம், காதணி விழா, சீர் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகமானது வாடகை கட்டணமாக ரூ.1000 வசூலிக்கிறது.
இதுமட்டுமின்றி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அவ்வப்போது முகாம்கள், விழிப்புணர்வு கூட்டங்கள், நகர சபா கூட்டங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டங்கள் என அனைத்தும் இந்த சமுதாய கூடத்தில்தான் நடைபெறுகின்றன. இவ்வளவு பயன்பாடுகள் இருந்தும் இக்கட்டிடம் கடந்த 18 ஆண்டுகளாக இதுவரை எவ்வித பராமரிப்பும் செய்யப்படவில்லை. ஜன்னல் கண்ணாடிகள், கதவுகள், பாத்ரூம் கதவுகள், விளக்குகள், குடிநீர் குழாய்கள், மின்மீட்டர் பெட்டி ஆகியன உடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளன. கழிவறைகள், பாத்ரூம், மணமகன், மணமகள் அறைகளுக்கு மின்வசதியில்லை. நிகழ்வுகளுக்கு வரும் தம்பதியினர் உடை மாற்றுவதற்கு கூட வெளியிடங்கள், சமையல் கூடத்தை பயன் படுத்துகின்றனர்.
கைகழுவும் இடம் சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. 18 ஆண்டுகளாக வர்ணம் கூட பூசவில்லை. குறிப்பாக இந்த சமுதாய நலக் கூடத்தில் ஒரே ஒரு ஹால் மட்டுமே இருப்பதால் அதிலேயே வரவேற்பு நிகழ்வும், உணவு அருந்தும் நிகழ்வும் ஒரே சமயத்தில் நடத்த வேண்டியுள்ளது. இதனால் சமுதாய கூடத்திற்கு முன்புள்ள காலி மைதானத்தில் சாமியானா அமைத்து உணவு அருந்தும் அவல நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை நேரில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் அளிக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் வேறு வழியின்றி கூடுதல் செலவு செய்து தனியார் மண்டபங்களை நாட வேண்டிய நிலை உள்ளது.
எனவே, இந்த சமுதாய கூடத்தை புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் கூறுகையில் ”சமுதாய கூடத்தை புனரமைப்பது,கூடுதல் கட்டிடம் கட்டுவது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கியவுடன் பணிகள் விரைவில் துவங்கும் என்றார்.
