மதுரை: மதுரை காந்திமியூசிய வளாகத்திற்குள் நெருக்கடியான இடத்தில், சேதமுற்ற வாடகை கட்டிடத்தில் ஒதுங்கிக் கிடக்கும் அரசு அருங்காட்சியகத்திற்கு தனி இடம் ஒதுக்கி, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் 1981ல் துவங்கப்பட்டது. இதில் பழந்தமிழர்கள் துவங்கி ஆங்கிலேயர் காலம் வரை பயன்படுத்திய பல அரிய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. 10 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் பயன்பாட்டில் இருந்த கற்கருவிகள், பழங்கால மனிதர்களின் மண்பாண்டங்கள், விளக்குகள், குவளைகள் என அகழாய்வு பொருட்களுடன், மீட்டெடுக்கப்பட்ட தேர் மரச்சிற்பங்கள் உள்பட பலதரப்பட்ட சிற்பங்கள் இங்கிருக்கிறது.
மதுரையில் கிடைத்த திருப்பாவை, மகாபாரதம், மருத்துவம் உள்ளிட்ட பழமை வாய்ந்த ஓலைச் சுவடிகளும் உள்ளன. ஆங்கிலேயர்களுக்கு எதிரான கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைக்க பயன்படுத்திய ‘லெதர் பப்பட்’ பிரசாரக் கருவி முதல் உலோகத்திலான நடராஜர் துவங்கி பலதரப்பட்ட சிலைகள், பழங்காலத்து குழந்தைக்கான கிலுகிலுப்பு, பாசிமணிகள், சங்கிலிகள், ஆங்கிலேயர் கால அளவைகளும் உள்ளன. பதப்படுத்தப்பட்ட விதவிதமான பாம்புகள், தேள்கள் உள்ளிட்ட விலங்கினங்கள், ஆங்கிலேயர் காலத்து பயன்பாட்டில் இருந்த வளரி, ஈட்டி, இரும்பு ஹெல்மெட், ஆளுயர துப்பாக்கிகள், தோட்டாக்களும் பார்வைக்கு இருக்கிறது.
இத்துடன் மதுரையில் முதன்முதலாக கண்டெடுக்கப்பட்ட பீரங்கியும் இங்குதான் இருக்கிறது. இங்குள்ள சிற்பக்காட்சிக் கூடமும் சிந்தைக்கு விருந்தளிக்கிறது. பல்வேறு வகை அரிய பொருட்களின் பழமைக் கூடமாக இந்த அரசு அருங்காட்சியகம் இருப்பினும், காந்திமியூசிய வளாகத்திற்குள் நெருக்கடியான இடத்தில், சேதமுற்ற வாடகைக் கட்டிடத்தில் இந்த அற்புத அருங்காட்சியகம் மிக மோசமான நிலையில் இயங்கி வருகிறது. இங்கிருக்கும் பழமைப் பொருட்களை பாதுகாப்பதும் சவாலாக இருக்கிறது. இதுகுறித்து மதுரை பழமை ஆர்வலர்கள் கூறியதாவது: மதுரை வரலாற்றுப் பெருமைக்குரிய நகரம்.
பழம்பெருமைக்குரிய இந்நகரத்தின் அதிகமதிகம் தொல்லியல் பொருட்கள் கொண்ட அரசு அருங்காட்சியகம் கடும் நெரிசலான இடத்தில், பலரது பார்வைக்கும் தெரியாத வகையில் ஒரு ஓரத்தில் எந்த அடிப்படை வசதியுமின்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. மதுரையைச் சுற்றிலும் கிடைத்த அரிய பல தொன்மைப் பொருட்களையும் இங்கு வைத்து பாதுகாத்து பார்வைக்கு வைப்பதற்கான வசதிகள் இல்லை. பல்லாண்டுகளாக வெயில் மற்றும் மழையில் கிடந்த கற்சிற்பங்களுக்கு, தற்போதுதான் ஒரு கூரை அமைத்து தரப்பட்டுள்ளது. கடும் இட நெருக்கடியுடன் தான் அருங்காட்சியகத்தில் தொல்லியல் பொருட்களை பார்க்க முடிகிறது.
நாட்டின் பெரிய அளவிலான காந்திய ஆராய்ச்சி மையமாக காந்தி மியூசியம் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த காந்தி மியூசிய வளாகத்திற்குள் உள்ள அரசு அருங்காட்சியகத்தை நெருக்கடியின்றி அனைவரும் பார்வையிட்டு செல்லும் வகையில், மதுரை தமிழ்சங்கம் – சட்டக்கல்லூரிக்கு இடைப்பட்ட காலி இடத்தில் ஏற்படுத்த வேண்டும். விசாலமான இவ்விடத்தில் அரசு அருங்காட்சியகத்திற்கு தனி கட்டிடம், வளாகம் அமைத்து, காந்தி மியூசியத்தலிருந்து அரசு அருங்காட்சியகத்தை இவ்விடத்திற்கு மாற்றினால், மதுரைக்கான மற்றொரு பழம்பெருமை அறியும் அடையாளமாக உருப்பெறும். இவ்வாறு கூறினர்.
