ஈரோடு: ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜ் அளித்த பேட்டி:
ஈரோடு மாவட்டம் கோபி, நம்பியூர், சத்தியமங்கலம் ஆகிய அரசு போக்குவரத்து கழக கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் பிரபுக்கு ஆதரவாக, அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக பணியாற்றினார்கள் என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஈரோடு மண்டலத்தில் இருந்து கோவை மண்டலம், திருப்பூர் மண்டலங்களுக்கு 9 பேரை மாற்றியுள்ளனர். இதனை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த, கோபி போலீஸ் ஸ்டேஷனில் அனுமதி கேட்டால்மறுத்து விட்டனர். தற்போது ஈரோடு எஸ்பி.யிடம் மனு அளித்துள்ளோம்.
அமைச்சர் செங்கோட்டையன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளரிடத்தில் தொலைபேசியில் கோபி கிளையில் பணியாற்றுகிற ஊழியர்களுக்கு மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும் என்றும், இதற்கான பட்டியலை எனது உதவியாளர் சபேசன் தருவார். அந்த பட்டியலை பரிசீலித்து உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் உதவியாளராக இருக்கிற சபேசன், அனைத்து அரசு விஷயங்களிலும் தலையிட்டு வருகிறார். ஏற்கனவே அமைச்சர் செங்கோட்டையனிடம் உதவியாளராக இருந்தவர், என்னென்ன விளைவுகளை சந்தித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த முறை உதவியாளராக இருக்கிற சபேசன், ஏற்கனவே இருந்த உதவியாளரை விட வேகமாக அனைத்து விஷயத்திலும் தலையிடுகிறார். வருவாய் துறையில் ஒரு வட்டாட்சியரை மிரட்டியதோடு சஸ்பெண்ட் செய்ய வைத்துள்ளார். அமைச்சரை காட்டிலும், அதிகார துஷ்பிரயோகம் செய்பவராக அவரது உதவியாளர் சபேசன் இருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. முதல்வர் வெளிப்படையான அரசாங்கம், ஊழல் இல்லாத அரசாங்கம், கட்சிக்காரர்கள் தலையீடும் இல்லாத ஒரு நிர்வாகத்தை தருகிறேன் என்கிறார். ஆனால், ஈரோடு மாவட்டத்தில் ஒரு அமைச்சரின் உதவியாளர் சபேஷனின் ஆதிக்கத்தை கூட கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. இவ்வாறு ஏ.கே.செல்வராஜ் கூறினார்.
