×

இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை பற்றி ஆலோசனை; பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு: புதுமைகளின் நாடு இந்தியா மாநாட்டை கூட்டாக தொடங்கி வைத்தனர்

நீஸ்: அரசு முறை பயணமாக வௌிநாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஸ்லோவாக்கியா குடியரசின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஆகியோரது அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் முதல் வரும் 18ம் தேதி வரை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகருக்கு சென்ற பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆரத்தழுவியும், கைக்குலுக்கியும் உற்சாகமாக வரவேற்றார். நேற்று பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இருதரப்பு உறவுகளின் தற்போதைய முன்னேற்றங்கள் பற்றி ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து, இந்தியா, பிரான்ஸ் புத்தாக்க ஆண்டின் ஒருபகுதியாக, இந்திய உயர் கல்வி நிலையங்கள் மற்றும் ஒன்றிய அரசின் உதவி பெறும் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களின் தொழில்நுட்ப முயற்சிகளை காட்சிப்படுத்தும் பாரத் இன்னோவேட்ஸ் (புதுமைகளின் நாடு இந்தியா) என்ற 3 நாள் மாநாட்டை பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் கூட்டாக தொடங்கி வைத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்புவரை, இந்தியாவை தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாடாகவே உலக நாடுகள் பார்த்து வந்த நிலையில் தற்போது இந்தியா தொழில்நுட்பங்களை உருவாக்கும் நாடாக மாறி வருகிறது. நிலையான எதிர்காலத்துக்காக இந்தியா புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்கிறது. உலகளவில் இந்தியா வெறும் நுகர்வோராக மட்டுமல்லாமல், தீர்வுகளை உருவாக்கும் நாடாகவும் உருவெடுத்துள்ளது.

இந்தியாவின் மரபணுவிலேயே புதுமைகள் பொதிந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியா தனது அறிவாலும், புத்தாக்க முயற்சிகளாலும் உலகத்துக்கு புதிய திசையை காட்டி உள்ளது. கணிதம் முதல் வானியல் வரை, மருத்துவம் முதல் யோகா வரை இந்தியாவின் பெரும் பங்களிப்பே ஒட்டுமொத்த மனிதகுல முன்னேற்றத்துக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது. இந்த பாரம்பரியத்துக்கு தற்போது ஒரு புதிய உத்வேகத்தையும், புதிய திசையையும் இந்தியா வழங்கி உள்ளது. புதுமைகளின் நாடான இந்தியாவின் இளம் கண்டு பிடிப்பாளர்கள் ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் பயனளிக்கும் தீர்வுகளை கண்டறிந்து வருகின்றனர். இந்தியா, பிரான்ஸ் இடையே அசைக்க முடியாத நம்பிக்கை, புதிய கண்டுபிடிப்புகள், பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வை ஆகியவை உள்ளன.

மத்தியகிழக்கு பகுதிகளில் நீடிக்கும் மோதல்கள் மற்றும் காலநிலை மாற்றம் அதிகரித்து வரும் சூழலில், உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் மாற்றங்களையும் சந்தித்து வருகிறது. மனித குலத்தின் முன் அளவற்ற சவால்கள் இருந்தாலும், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினி, உயிரி தொழில்நுட்பம், விண்வௌி தொழில்நுட்பங்கள் போன்றவை மனிதகுலத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் தொழில்நுட்பங்களாகும். இவையே தற்போது மனித நாகரிகத்தின் அடுத்த அத்தியாயங்கள். ஒவ்வொரு புதிய தொழில்நுட்ப புரட்சியும் மனிதகுலத்துக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது. ஒவ்வொரு புதிய வாய்ப்பும் ஒரு புதிய பொறுப்பை அளிக்கிறது. மனித குலத்துக்கு சேயைாற்றும் தொழில்நுட்பங்களுக்கு இந்தியா தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது” என்று தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசும்போது, “பிரதமர் மோடியை நீஸ் நகருக்கு வரவேற்பதிலும், இந்தியாவுக்கு வௌியே நடைபெறும் முதலாவது பாரத் இன்னோவேட்ஸ் நிகழ்வை தொடங்கி வைப்பதிலும் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்தியாவின் மிகச்சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும், கண்டுபிடிப்பாளர்களையும் காட்சிப்படுத்துவதற்கு பிரான்ஸ் நாட்டை தேர்ந்தெடுத்தது எங்கள் நாட்டுக்கு கிடைத்த பெருமை” என்றார்.

  • பிரதமர் மோடி நேற்று முன்தினம் முதல் வரும் 18ம் தேதி வரை பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
  •  பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகருக்கு சென்ற பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆரத்தழுவி வரவேற்றார்.
  • இரு தலைவர்களும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.
  • புதுமைகளின் நாடு இந்தியா என்ற 3 நாள் மாநாட்டை பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் கூட்டாக தொடங்கி வைத்தனர்.
Tags : PM Modi ,President Macron ,India Innovation Summit ,Nice ,Modi ,President Emmanuel Macron ,President ,Emmanuel Macron ,Slovak Republic ,Robert Figo… ,
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவு