- இந்தியா
- ஸ்லோவாகியா
- பிரதமர் மோடி
- பிராடிஸ்லாவா
- மோடி
- ஜனாதிபதி
- இம்மானுவேல் மக்ரோன்
- ஸ்லோவாக் குடியரசு
- ராபர்ட் ஃபிகோ
- நைஸ், பிரான்ஸ்…
பிராட்டிஸ்லாவா: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஸ்லோவாக்கியா குடியரசின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஆகியோரது அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார்.
இதையடுத்து வௌிநாட்டு பயணத்தின் 2ம் கட்டமாக பிரதமர் மோடி நேற்று ஸ்லோவாக்கியா சென்றார். தலைநகர் பிராட்டிஸ்லாவாவை சென்றடைந்த பிரதமர் மோடியை ஸ்லோவாக்கியா குடியரசின் வௌியுறவு அமைச்சர் ஜூராஜ் பிளானர் வரவேற்றார். அப்போது பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் விருந்தோம்பல், மரியாதை மற்றும் நல்லெணத்தின் அடையாளமாக திகழும் ரொட்டி மற்றும் உப்பு வழங்கி சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த பயணத்துக்கு முன் பிரதமர் மோடி வௌியிட்ட அறிக்கையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம், நமது இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள வலுவான முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும். ஸ்லோவாக்கிய அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி மற்றும் பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஆகியோருடன் கலந்துரையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்லோவாக்கியா ஒரு முக்கியமான மற்றும் மதிப்புமிக்க உறுப்பினராக உள்ள நிலையில், அந்த ஒன்றியத்துடனான இந்தியாவின் உத்திசார் கூட்டாண்மையை இந்த பயணம் மேலும் வலுப்படுத்தும்” என தெரிவித்திருந்தார்.
நேற்று மாலை ஸ்லோவாக்கிய அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி மற்றும் பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ஆட்டோமொபைல், பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வௌியிட்ட அறிக்கையில், “எங்கள் உறவுகளை விரிவான கூட்டாண்மை நிலைக்கு உயர்த்த முடிவு செய்துள்ளோம். இது எங்கள் பகிரப்பட்ட நம்பிக்கைகள், முன்னுரிமைகள் மற்றும் எதிர்காலத்தை குறிக்கிறது.
இந்திய ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு ஸ்லோவாக்கியா அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி. இருநாடுகளின் தொழில்துறைகள், ஸ்டாட்அப்கள் மற்றும் வர்த்தகர்கள் இதிலிருந்து அதிகளவு பலன்களை பெறும் வகையில், இதை விரைவில் செயல்படுத்துவதற்கான பணிகளை இருநாடுகளும் மேற்கொள்ளும்” என குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த விருப்பம் தெரிவிக்கும் கடிதம் இறுதி செய்யப்பட்டது. ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ கூறுகையில், “இந்தியா ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மிகவும் விருப்பம் மிக்க வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்று. இந்த ஒப்பந்தத்தை ஸ்லோவாக்கியா வரவேற்பதுடன், இதை செயல்படுத்துவதற்கு அவசியமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றார்.
இந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, மோடி, ராபர்ட் ஃபிகோ முன்னிலையில் குடியேற்றம், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுப்படுத்துவதற்கான 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
1993ம் ஆண்டு ஸ்லோவாக்கியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு செல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்லோவாக்கிய பயணத்தை முடித்து கொண்டு இன்று மீண்டும் பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
12 ஆண்டு பதவிக்காலத்தில் பிரதமர் மோடியின் 100வது வெளிநாட்டு பயணம்
பிரதமர் மோடி தற்போது மேற்கொண்டுள்ள பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான ஒரு வார காலப் பயணம் 100-வது வெளிநாட்டுப் பயணமாகும். பிரதமர் அலுவலக இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, பிரதமராக மோடியின் முதல் பயணம் 2014 ஆம் ஆண்டு ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் பூட்டானுக்கு அமைந்திருந்தத. அதே ஆண்டில் ஜூலை 13 முதல் 17 வரை பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்றது அவரது இரண்டாவது பயணமாகும். தனது 12 ஆண்டு காலப் பதவிக்காலத்தில் இதுவரை மோடி 78 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். அவரது முதல் பதவிக்காலத்தில், பிரதமர் மொத்தம் 49 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார்.
அவரது இரண்டாவது பதவிக்காலத்தில், மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் 2019 ஆம் ஆண்டு ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு அமைந்திருந்தது. மோடி தனது இரண்டாவது பதவிக்காலத்தில் மொத்தம் 27 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார்.
அவரது மூன்றாவது பதவிக்காலத்தில், மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் இத்தாலிக்கு அமைந்திருந்தது. பிரதமரின் தற்போதைய வெளிநாட்டுப் பயணம், அவரது மூன்றாவது பதவிக்காலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 24வது பயணமாகும். மேலும் இந்த 12 ஆண்டுகளில் அவர் மேற்கொள்ளும் 100வது வெளிநாட்டு பயணம் ஆகும்.
