தகாத உறவில் பிறந்ததால் ஆத்திரம்; நீரில் மூழ்க வைத்து 9 மாத குழந்தை கொலை: தம்பதி கைது

பேரையூர்: தகாத உறவில் பிறந்ததால் 9 மாத பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கி கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம், பேரையூர் அருகே மெய்யனூத்தம்பட்டி வி.ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (29). மனைவி கலைச்செல்வி(26). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. கலைச்செல்வி மற்றொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கலைச்செல்வி கர்ப்பமாகி பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இதனையறிந்தும் கலைச்செல்வியுடன் பாண்டித்துரை சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். ஆனாலும், கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தை என்பதால் 9 மாதமாகியும் குழந்தைக்கு பெயர் வைக்காமல் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த மே 8ம் தேதி குழந்தை உடல்நலம் குன்றி, உயிரிழந்து விட்டதாக கூறி யாருக்கும் தெரியாமல் வீட்டின் அருகே அடக்கம் செய்துவிட்டனர்.

குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி சேடபட்டி வட்டார மருத்துவர் விஸ்வநாதபிரபு, விஏஓ சங்கீதா ஆகியோர் சாப்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, போலீசார் பாண்டித்துரை, கலைச்செல்வியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பெண் குழந்தையை ஏற்க மறுத்த கணவருக்காக, அண்டாவில் தண்ணீர் நிரப்பி அதில் 9 மாத பெண் குழந்தையை உயிர் பிரியும் வரை மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்து ஆதாரங்களைச் சேகரித்தனர். மேலும், இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று பாண்டித்துரை, கலைச்செல்வியை கைது செய்தனர்.

Related Stories: