சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்வர் விஜய் அனைத்துக்கட்சி தலைவர்களையும் சந்தித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டது. ஆனால் ஒரு சில தலைவர்கள், அவருடைய தனிப்பட்ட சூழ்நிலையை கருதி, நாங்களே தோல்வியுற்று இருக்கிறோம். இப்போது வேண்டாம் என்று கூறி விட்டார்கள். அதனால் எடப்பாடியை சந்திக்க முடியவில்லை.
முதல்வர் எந்த இடத்திலும் அநாகரிகமாக நடந்து கொண்டது கிடையாது. திருச்சியில் கூட அப்படி எதுவும் நடக்கவில்லை. சிலர் வேண்டும் என்றே தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். சிங்கப்பெண் விழா ரத்து செய்யப்பட்டற்கும், தனிப்பட்ட ஒரு நண்பரின் விழாவுக்கு முதல்வர் போனதற்கும் சம்பந்தம் இல்லை. அதிமுகவை காலி பண்ணியதே எடப்பாடிதான், வேறு யார் காலி செய்ய முடியும்?
* தனிப்பட்ட குற்றத்துக்கு கம்பெனி பொறுப்பேற்காது
குற்ற சம்பவங்கள் எதனால் நடைபெறுகிறது என்று அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு இடத்தில் தனிப்பட்ட குற்றங்கள் இருக்கும். அந்த குற்றம் சம்பவம் நடந்தபிறகு, சட்டம் ஒழுங்கை காக்கும் காவல் துறை எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். உடனே கைது, சிறப்பு படை அமைத்து எல்லாமே விரைவாக செயல்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள்.
பாலியல் குற்றம் நடக்கும் இடத்தில் என்னமாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்படுகிறது. தவெக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்றார் அமைச்சர். (அப்படியென்றால் கடந்த தேர்தல் பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கத்தி, கத்தி பேசியது எப்படி சரியாகும் என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.)
