சுருளி அருவிக்கு செல்ல வனத்துறை அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்து உள்ள சுருளி அருவியில் 1 மாதத்திற்கு பின், தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் இந்த அருவி திகழ்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஈத்தக்காடு, அரிசிப்பாறை மற்றும் மேகமலை தூவானம் பகுதியில் மழை பெய்யும் காலங்களில் அருவிக்கு நீர்வரத்து இருக்கும். விடுமுறை காலங்களில் தேனி, மதுரை, திண்டுக்கல் மட்டுமின்றி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து இயற்கை அழகை ரசித்து குளித்து மகிழ்வர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால் சொட்டு தண்ணீர் இல்லாமல் சுருளி அருவி வறண்டு கிடந்தது. இதையறியாமல் குளிக்க வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஆனால் தற்போது சுருளி அருவிக்கு மிதமான அளவில் தண்ணீர் வர துவங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் இந்த அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கி இருக்கிறது. கோடை காலத்தில் போதிய மழையின்றி சுமார் 3 மாதங்களாக வறண்டு காணப்பட்ட இந்த அருவியில், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கோடை மழையின் காரணமாக நீர் வரத்து காணப்படுகிறது. இதனால், வனத்துறையினர் தடையை நீக்கி சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கத் தொடங்கியுள்ளனர்.சுருளி அருவிக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

 

Related Stories: