சென்னை: தலைமை செயலகம் முன்பு சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ரவுடிகள் பைக்கில் இடுப்பில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தலைமை செயலகம் முன்பு ராஜாஜி சாலை, காமராஜர் சாலையில் இரவு நேரத்தில் 2 ரவுடிகள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் பின்னால் அமர்ந்து இருந்த ரவுடி ஒருவர் தனது இடுப்பில் பட்டாக்கத்தியை சொறுகி வைத்து கொண்டு எந்தவித பதற்றமும் இல்லாமல் செல்கிறார்.
கஞ்சா போதையில் இருந்த அவர், ஒரு கட்டத்தில் பைக்கில் அமர்ந்தபடி இரண்டு கைகளையும் வீசியபடி இடுக்கில் உள்ள பட்டாக்கத்தி வெளியே தெரிய வேண்டும் என்ற நோக்கில் செல்கிறார். இதை அவர்கள் பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து, ‘தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு இப்படி தான் இருக்கிறது’ என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அந்த வீடியோவையும் பதவேற்றம் செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இன்ஸ்டா மற்றும் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதால், சென்னை போக்குவரத்து போலீசார் தலைமை செயலகம் முன்பு உள்ள சாலையில் பட்டாக்கத்தியுடன் பைக்கில் சென்ற ரவுடிகள் யார் என்பது குறித்து, பைக் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
