நாமக்கல்லில் 2 சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஸ்ரீவைகுண்டத்தில் பெண் பலாத்காரம்; தவெக நிர்வாகிகள் கைது: மக்கள் மறியல்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் இருவேறு இடங்களில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்களை, தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி, காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு எற்பட்டது. இதேபோல் ஸ்ரீவைகுண்டத்தில் பெண்ணை பலாத்காரம் செய்த தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் மணி(62). கூலித்தொழிலாளி. இவர், பேத்தி முறை உறவு கொண்ட 12 வயது சிறுமியை, நேற்று முன்தினம் அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர், வீடு திரும்பும் வழியில் மறைவான இடத்தில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், திடுக்கிட்ட அந்த சிறுமி, அவரது பிடியிலிருந்து தப்பியோடி வந்து, பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மணியை தேடி சென்றனர். ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில், நேற்று காலை மணியை கண்டுபிடித்த சிறுமியின் பெற்றோர், தர்மஅடி கொடுத்து குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று ஒப்படைத்தனர்.இதேபோல், குமாரபாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வீட்டிற்கு, அவரது சகோதரி தனது மூன்றரை வயது சிறுமியுடன் விருந்தினராக வந்திருந்தார். அந்த சிறுமி நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் உள்ள மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். பின்னர், வீடு திரும்பியபோது சோர்வாக இருந்தாள். சிறிது நேரத்தில் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு அழுதாள். உடனடியாக சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, சிறுமியின் உடலில் காயம் இருந்ததை கண்ட பெற்றோர் விசாரித்த போது, அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (59) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, வரதராஜனை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த போலீசார், வரதராஜனை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். முந்தைய சம்பவத்தை அறிந்து ஆத்திரத்தோடு காவல் நிலையம் முன் குவிந்திருந்த பொதுமக்கள், இரண்டாவதாக மேலும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து கொந்தளித்தனர்.

மேலும், குற்றவாளி வரதராஜனை போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்ததை கண்டதும், அங்கிருந்த பெண்கள் செருப்பை கழற்றி அவரை சரமாரியாக தாக்கினர். தடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாருக்கும் அடி விழுந்தது. காவல் நிலையத்தில் உள்ள குற்றவாளிகளை, தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும், அவர்களுக்கு சட்டப்படி தண்டனை போதாது. தாங்கள் தரும் தண்டனை தான் சரியாக இருக்குமென கூறி, ஆவேசத்துடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கவே, அருகில் உள்ள காவல் நிலையங்களில் இருந்தும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர். மேலும், காவல் நிலையத்தின் முன்புற நுழைவாயிலை பாதுகாப்புக்காக இழுத்து மூடினர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் காவல் நிலையம் முன்பும், பள்ளிபாளையம் பிரிவு சாலையிலும் திடீரென மறியல் போராட்டத்தில் குதித்தனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலா குமாரபாளையம் விரைந்தார். நாமக்கல்லில் இருந்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் உள்ளிட்ட போலீசார் குமாரபாளையத்தில் குவிக்கப்பட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை மாவட்ட எஸ்.பி. விமலா சந்தித்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து, 15 நாட்களில் விசாரணையை முடித்து, குற்றவாளிகளுக்கு அதிகப்படியான தண்டனை பெற்றுத்தரும்படி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, மாலையில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.மக்கள் தாக்கியதில் மணிக்கு மண்டை உடைந்து படுகாயமடைந்தார். அவரை போலீசார் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட வரதராஜனை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். தகவலறிந்து சேலம் சரக டிஐஜி சாமிநாதன் குமாரபாளையத்திற்கு நேரில் வந்து விசாரித்தார். எஸ்.பி.க்கள் நாமக்கல் விமலா, ஈரோடு சிவசுருதி, சேலம் கௌதம் கோயல் ஆகியோர் முகாமிட்டு விசாரணையை முடுக்கி விட்டனர்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவரது நண்பர், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜெயபால். இவரும் தமிழக வெற்றிக்கழகத்தில் நிர்வாகியாக உள்ளார்.இவர்கள் இருவரும் ஏரல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை வேலை வாங்கித் தருவதாக கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். ராமநாதபுரம் அருகே ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இளம்பெண்ணை ஏமாற்றி தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவரை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண், இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி பாலமுருகன், ஜெயபால் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை. மத்திய சிறையில் அடைத்தனர்.வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி இளம்பெண்ணை அழைத்து சென்று தவெக நிர்வாகிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: