சென்னை: மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குதிரையோட்டியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோட்டை விடுமுறை என்பதால் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மெரினா கடற்கரையில் குதிரை சவாரியும் களைகட்டியது. 6 வயது குதிரை சவாரி செய்ய வேண்டும் என்று தனது பெற்றோரை தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் சிறுமியின் பெற்றோர் கடற்கரையில் குதிரை சவாரி செய்யும் நிதிஷ்(20) என்பவரின் குதிரையில் சிறுமியை ஏற்றியுள்ளனர். அப்போது குதிரையோட்டியான நிதிஷ் சிறுமியை குதிரையின் மீது தன்னுடன் அமரவைத்து சவாரியில் ஈடுபட்டார். அப்போது சிறுமியிடம் குதிரையோட்டி ‘கீழே விழுந்துவிட போகிறாய் என்னை கெட்டியாக பிடித்து கொள்’ என கூறி குதிரையை வேகமாக ஓட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமியை குதிரையோட்டி ஆபாசமாகவும், பாலியல் ரீதியான செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத சிறுமி குதிரையில் இருந்து கீழே இறக்கிவிடும்படி கூறி அழுதுள்ளார். ஆனாலும் குதிரையோட்டி சிறுமியிடம் குதிரையில் அமர்ந்தபடி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கூறக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். பின்னர் சிறுமியை இறக்கிவிட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டுள்ளார்.
சிறுமி அழுதபடி இருந்ததை பார்த்த அவரது பெற்றோர் என்ன என்று கேட்டனர். அதேநேரம் சிறுமியின் ஆடைகளும் கலைந்து இருந்தது. சிறுமி நடந்ததை அவரது பெற்றோரிடம் கூறி அழுதார். சிறுமியின் பெற்றோர் பொதுமக்கள் உதவியுடன் குதிரையோட்டியை பிடித்து சரமாரியாக தாக்கி மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
