* சென்னையில் பயங்கரம்; கொலையாளிகள் 3 பேர் புதுச்சேரியில் சுற்றிவளைப்பு; மருத்துவமனையில் 17 வயது தோழி உயிருக்கு போராட்டம்: பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் அம்பலம்
சென்னை: தவெக நிர்வாகிக்கு சொந்தமான ஓட்டலில் உள்ள மது பாரில் போதையில் டிஜே இசைக்கு நடனமாடும் போது, தன்னுடன் உல்லாசத்துக்கு வர மறுத்த தகராறில், இலங்கையை சேர்ந்த இன்ஸ்டா அழகியை சென்னையில் காரை ஏற்றி கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதில் 17 வயது தோழி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே ‘கேட்வே எப்எல்-3’ என்ற பெயரில் பிரபல ஓட்டல் இயங்கி வருகிறது.
இந்த ஓட்டல், பிரபல டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் தவெக நிர்வாகி ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. கோயம்பேட்டில் உள்ள இந்த ஓட்டலில் ‘டிஜே’ இசையுடன் மது பாரும் உள்ளது. இந்த பாருக்கு இரவு நேரங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள வசதியான வாலிபர்கள் மற்றும் காதல் ஜோடிகள் வந்து செல்வது வழக்கம். போதையில் இளம் பெண்களுடன் நடனமாடும் போது அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க பாரில் பவுன்சர்கள் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த நகுலேஸ்வரன் என்பவர் இலங்கை இறுதிக்கட்ட போரின் போது, தமிழத்தில் தஞ்சமடைந்து தற்போது விழுப்புரம் மாவட்டம் அனிச்சாங்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ளார். கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு யான்சி(18) என்ற மகள் இருந்தார். கடந்த ஆண்டு கடலூரில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 முடித்த யான்சி, சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர விண்ணப்பித்திருந்தார். அதேநேரம் யான்சி பெரிய அளவில் ‘இன்ஸ்டாகிராமில்’ பிரபலமாக வலம் வந்தவர்.
இவரது இன்ஸ்டாவை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். யான்சி, தனது இன்ஸ்டா நண்பர்கள் மற்றும் தோழிகளை அடிக்கடி நேரில் சந்தித்து வந்துள்ளார். புதுச்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசாட்டுகளுக்கு தனது இன்ஸ்டா நண்பர்களுடன் யான்சி இரவு மது விருந்துக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் யான்சி கடலூரில் பள்ளியில் படித்த போது, திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி பகுதியை சேர்ந்த தபிதா என்பவர் அறிமுகம் கிடைத்துள்ளது. தபிதா மூலம் யான்சிக்கு, தபிதாவின் தோழிகளான பவுசியா மற்றும் தீபிகா அறிமுகம் கிடைத்துள்ளது. இதில் பவுசியாவுடம், யான்சி அடிக்கடி இன்ஸ்டா மூலம் பழகி நல்ல தோழியாக இருந்துள்ளார். இதனால் யான்சி தனது தோழியான பவுசியை பார்க்க கடந்த 19ம் தேதி விழுப்புரத்தில் இருந்து சென்னையில் உள்ள பவுசியா வீட்டிற்கு வந்து கடந்த 29ம் தேதி வரை தங்கியுள்ளார்.
சென்னை வந்த நாட்களில் யான்சி தனது தோழிகளான பவுசியா, தபிதா, தீபிகா என 5 தோழிகள் ஒவ்வொரு நாளும் ஒரு இடத்தில் சந்தித்து பேசி, சென்னையை சுற்றி வந்துள்ளனர். கடந்த 28ம் தேதி யான்சியும் பவுன்சியாவும் மாலை சினமா பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு ஸ்கூட்டரில் கிளம்பியுள்ளனர். மறுநாள் காலை 29ம் தேதி பவுசியா மற்றும் யான்சி ஆகியோர் போதை சரியாக தெளியாத நிலையில் பவுசியா வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பவுசியின் அம்மா இருவரையும் ‘சினிமாவுக்கு போறேன்னு சொல்லிட்டு இப்படி குடிச்சிட்டு வந்து நிக்கிறீங்களே..’ என்று கடுமையாக திட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் யான்சியைப் பார்த்து, ‘நீ உடனே உங்க ஊருக்கு கிளம்பிப் போ..’ என்றும் கோபத்துடன் பேசியுள்ளார். இதனால் யான்சி நான் எங்கள் வீட்டிற்கு செல்கிறேன் என்று தோழி பவுசியாவிடம் கூறிவிட்டு பையுடன் புறப்பட்டுள்ளார். அப்போது பவுசியா நானும் உன்னுடன் வருகிறேன். என்று கூறி இருவரும் ஸ்கூட்டரில் பவுசியாவின் அம்மாவுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 29ம் தேதி இரவு தன்னுடன் பள்ளியில் படித்த தபிதா வீட்டில் இருவரும் தங்கியுள்ளனர்.
பின்னர் யான்சி, பவுசியா, தபிதா, தீபிகா உட்பட 6 இளம் பெண்களும், 3 ஸ்கூட்டரில் 30ம் தேதி இரவு கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள தவெக நிர்வாகியின் ஓட்டலான ‘கேட்வே எப்எல்-3’வுக்கு வந்துள்ளனர். பிறகு இரவு 11 மணிக்கு ஓட்டலில் உள்ள மது பாரில் யான்சி உள்பட 6 இளம் பெண்களும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதே மது பாரில் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலகுரு (21), சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜோஷ்வா (19), நெற்குன்றம் பகுதியை சேர்ந்த கிஷோர் குமார் (19), சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் ஒன்றாக குடித்துக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் பாரில் டிஜே இசையை ஒலிக்கவிட்டார். உடனே யான்சியும் அவரது தோழிகளும் போதையில் நடனமாடியுள்ளனர். அப்போது சுமன் சக்திவேல், பாலகுரு குழுவினர் அவர்களுடன் சேர்ந்து நடனமாடினர். திடீரென, ‘‘இன்னைக்கு நைட் எங்களோட இருங்க..’ என்று யாசினி மற்றும் தோழிகளிடம் சுமன் சக்திவேல், பாலகுரு தரப்பினர் கட்டாயப்படுத்தியுள்ளனர். அதற்கு யான்சி உடன் வந்த 3 இளம் பெண்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் மற்ற 3 பெண்கள் உல்லாசமாக இருக்க ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால் சுமன் சக்திவேல் தரப்பு இன்று எங்களுடன் கட்டாயம் 6 பேரும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லை என்றால் உங்களை சும்மாவிடமாட்டோம் என்று கூறி தகராறு செய்துள்ளனர். இதனால் யான்சியுடன் வந்த 3 பெண்கள் தங்களது வீட்டிற்கு செல்வதாக கூறி அவசரமாக பாரில் இருந்து வெளியேறினர். அதற்கு, ‘‘எங்க தப்பிச்சு போக பாக்குறீங்க..’ என்று கூறியபடி கைகளை பிடித்து இழுத்தும் கட்டியணைத்தும் வம்பு செய்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றியது.
யான்சி தனது தோழிகளை உல்லாசத்திற்கு அழைத்த பாலகுரு மற்றும் அவரது தரப்பினரை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பாரிலேயே இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. உடனே பவுன்சர்கள் குறுக்கிட்டு, அனைவரையும் பாரில் இருந்து வெளியேற்றினர். யான்சி தரப்பு அவர்கள் வந்த ஸ்கூட்டர்களை எடுக்க சென்ற போது, மீண்டும் பாலகுரு தரப்பினர், ‘‘உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தருகிறோம். எங்களுடன் இன்று நீங்கள் கட்டாயம் இருந்து விட்டு தான் செல்ல வேண்டும்’’ என்று கூறி தங்களது காரில் ஏற கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதனால் அப்போது யான்சி தரப்புக்கும், சுமன் சக்திவேல், பாலகுரு தரப்புக்கும் இடையே மீண்டும் ஒருவரை ஒருவர் கடுமையாக போதையில் தாக்கி கொண்டனர். ஓட்டல் முன்பு மீண்டும் இரு தரப்பினரும் தாக்கி கொண்டதால், பவுன்சர்கள் மீண்டும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்லும்படி அனுப்பி வைத்தனர். ஒரு வழியாக போதையில் யான்சி தனது 17 வயது தோழியான தீபிகாவின் ஸ்கூட்டரிலும், பவுசியா, தபிதா என 4 பேர் 2 ஸ்கூட்டரிலும் புறப்பட்டு அங்கிருந்து திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி பகுதியில் உள்ள தபிதா வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
அதேநேரம் பாலகுரு தரப்பினர் காரில், இவர்களின் ஸ்கூட்டர்களை பின் தொடர்ந்து விரட்டியுள்ளனர். கோயம்பேடு- திருமங்கலம் சாலையில் செல்லும் போது, பின் தொடர்ந்த சுமன் சக்திவேல், பாலகுரு தரப்பு வந்த கார் மீது யாமினியும் தோழிகளும் கற்களை வீசி தாக்கியுள்ளனர். போதையின் உச்சத்தில் இருந்த பாலகுரு தரப்பினர் மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் யான்சி மற்றும் தீபிகா சென்ற ஸ்கூட்டரை அதிவேமாக துரத்தி சென்று காரில் வேகமாக மோதினர். அதில் ஸ்கூட்டரை ஓட்டிய யான்சி மற்றும் தீபிகா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
அப்போதும் ஆத்திரம் தீராத பாலகுரு தரப்பினர் காயங்களுடன் கீழே விழுந்த யான்சி மீது மீண்டும் காரால் மோதிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் யான்சி தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து வந்த தீபிகா தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். பின்னால் 2 ஸ்கூட்டரில் வந்த பவுசி, தபிதா உள்ளிட்ட 4 இளம் பெண்கள் விபத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அதேநேரம் யான்சி ஓட்டிய ஸ்கூட்டர் இன்ஸ்டா தோழியான அஷ்சு என்பவருடையது என்தால், அவர் தனது ஸ்கூட்டரை அங்கிருந்து எடுத்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய தீபிகாவை சாலையில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த தகவலின் படி கோயம்பேடு போலீசார் விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தீபிகாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீபிகா அவசர மருத்துவ பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார்.
தீபிகா வைத்திருந்த அடையாள அட்டைகளை வைத்து ராமாபுரத்தில் உள்ள அவரது தாய் பத்ருநிஷாவுக்கு தகவல் அளித்தனர். பத்ருநிஷா அவரது கணவர் பாண்டியனை பிரிந்து கடந்த 6 ஆண்டுகளாக தனது மகள் தீபிகாவுடன் வசித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. உயிரிழந்த இலங்கை இன்ஸ்டா அழகியான யான்சி உடலை கோயம்பேடு போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கோயம்பேடு போலீசார் விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, ‘கேட்வே எப்எல்-3’ ஓட்டலில் இருந்து உயிரிழந்த யான்சி உட்பட 6 இளம் பெண்களை சுமன் சக்திவேல் மற்றும் பாலகுரு தரப்பினர் தங்களது காரில் பின் தொடர்ந்து திட்டமிட்டு படுகொலை செய்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து கோயம்பேடு போலீசார் காரை ஓட்டிய சமன் சக்திவேல், பாலகுரு, ஜோஷ்வா, கிஷோர் குமார், விமல், கோமகன் சுந்தரம், ராகுல் ஆகிய 7 பேர் மீது கொலை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விபத்தின் மூலம் கொலை செய்துவிட்டு தப்பி சென்ற கார் சென்ற வழிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வந்தனர். விபத்து ஏற்படுத்திய கார் கோயம்பேடு பூண்டு மார்க்கெட் பகுதியில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதேநேரம் காரின் பதிவு எண்ணை கழற்றிவிட்டு ஒன்றும் தெரியாதப்படி அவர்கள் பூண்டு மார்க்கெட்டில் இருந்து சென்ற காட்சிகள் சிசிடிவி மூலம் உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும், யான்சியை கொலை செய்துவிட்டு சுமன் சக்திவேல், பாலகுரு உள்ளிட்ட 7 பேரும் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு தப்பி சென்றதும் தெரியவந்தது.
உடனே கோயம்பேடு போலீசார் புதுச்சேரி மாநில போலீசார் உதவியுடன் பாலகுரு(21), சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜோஷ்வா(19), நெற்குன்றம் பகுதியை சேர்ந்த கிஷோர் குமார்(19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுமன் சக்திவேல், மோகனசுந்தரம், ராகுல், விமல் ஆகிய 4 பேரை கோயம்பேடு துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து யான்சி கொலை குறித்த பின்னணி பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நட்சத்திர ஓட்டல் மது பாரில் போதையில் நடனமாடும் போது, உல்லாசத்திற்கு வர மறுத்த இலங்கை இன்ஸ்டா அழகி ஒருவரை 7 பேர் கொண்டு போதை ஆசாமிகள் கொடூரமாக காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* என் மகள் இன்ஸ்டாவில் அழகாய் ரீல்ஸ் போடுவாளே… யான்சியின் தாய் மேரி ஸ்டெல்லா கண்ணீர்
தனது மகள் யான்சி கொலை செய்யப்பட்டதை அறிந்து, விழுப்புரம் இலங்கை அகதிகள் முகாமில் இருந்து வந்த தாய் மேரி ஸ்டெல்லா தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுது துடித்தது மருத்துவமனையில் இருந்தவர்கள் மத்தியில் சேகத்தை ஏற்படுத்தியது.
பின்னர் யான்சி தாய் மேரி ஸ்டெல்லா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘‘என் மகள் யான்சி பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரி செல்வதற்காக காத்திருந்தார், பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்து படிப்பதற்காக விண்ணப்பித்து இருந்தார். யான்சி இன்ஸ்டாகிராமில் ஒவ்வொரு முறையும் வீடியோக்களை பதிவிட்டு வருவாளே… என் மகள் நடிகை போல் அழகாக இருப்பாளே… இனி என் மகளை நான் எப்படி பார்ப்பேன். என் மகளை கார் ஏற்றி கொன்ற குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும்’’ என்று கண்ணீர் மல்க கூறினார்.
* பாருக்கு சீல்
கோயம்பேடு பாரில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் கார் ஏற்றிக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, சம்பந்தப்பட்ட மது பாருக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை காவல்துறையினர் சீல் வைத்தனர்.
* 17 வயது சிறுமியை பாருக்குள் அனுமதித்தது ஏன்?
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே ‘கேட்வே எப்எல்-3’ என்ற பெயரில் உள்ள ஓட்டல் மது பாரில், பல ஆண்டுகளாக இரவு நேரங்களில் மது பாரில் 18 வயதுக்கு குறைவான சிறுவன் மற்றும் சிறுமிகளை சட்டவிரோதமாக அனுமதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால் ஓட்டல் உரிமையாளர் பாலாஜி தவெக நிர்வாகியும், பிரபல தொழிலதிபர் என்பதால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசு அனுமதியை கடந்து வார இறுதி நாட்களில் விடிய விடிய 3 மணி வரை சட்டவிரோதமாக அவரது ஓட்டலில் மது பார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
முறையாக டாஸ்மாக் சட்டத்தின் படி காலை 11 மணி முதல் இரவு 12 மணி வரை நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு உத்தரவை மீறி இந்த ஓட்டல் அதிகாலை 3 மணி வரை நடந்து வருவதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேநேரம் கொலை செய்யப்பட்ட யான்சிக்கு 18 வயது தான் ஆகிறது. அதேபோல் உயிருக்கு போராடி வரும் தீபிகாவுக்கு 17 வயது தான் ஆகிறது. இதுபோல் பவுசியா, தபிதா, அஷ்சு ஆகியோரும் 17 முதல் 18 வயது உடையவர்கள் என்று போலீசார் விசாரணையில் உறுதியாகி உள்ளது.
இதனால் ஓட்டலில் பார் நடத்தி வரும் தவெக நிர்வாகியான பாலாஜி சட்டவிரோதமாக பணத்திற்காக சிறுமிகளை போதைக்கு அடிமையாகி அவர்களை போதையில் ஆண் நண்பர்களுடன் தவறான பாதைக்கு செல்ல துணையாக இருந்தது போலீசார் நடத்திய விசாரணையில் உறுதியாகியுள்ளது. எனவே பார் உரிமையாளரான தவெக நிர்வாகி பாலாஜியிடம் போலீசார், சட்டவிரோதமாக சிறுமிகளை பாருக்குள் அனுமதித்தது ஏன், அரசு விதிகளை ஏன் முறையாக பின்பற்றவில்லை என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
