பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா சோதனை நடத்திய போலீசார் மீது பெண்கள் தாக்குதல் நடத்தினர். இதுசம்பந்தமாக ரவுடியை கைது செய்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பேசின்பிரிட்ஜ் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து புளியந்தோப்பு காந்திநகர் 5வது தெருவில் உள்ள சரித்திர பதிவேடு ரவுடி நந்தகுமார் (26) வீட்டில் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண்கள் சோதனை செய்யக்கூடாது என போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். அப்போது நந்தகுமாரின் தாய் மீனா, ‘’முதல்வரிடம் உங்களைப் பற்றி கூறுகிறேன் பாருங்கள்’’ என்று தனது செல்போனை எடுத்துக்கொண்டு வெளியே ஓடிச் சென்று போலீசாரை மிரட்டியுள்ளார்.
இதனிடையே நந்தகுமார் வீட்டில் சோதனை நடத்தி 10 கிராம் எடையுள்ள 29 கஞ்சாபொட்டலங்கள் மற்றும் 6 போதை சிரஞ்சிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கிருந்த ரவுடி நந்தகுமாரை கைது செய்து வீட்டை விட்டு வெளியே அழைத்து வரும்போது அவரது தாய் மற்றும் பெண்கள் ஆகியோர் சேர்ந்து போலீசார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசாரும் எதிர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது. தற்போது இந்த தாக்குதல் வீடியோ சமூகவலைதள பக்கத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையம் ரவுடி நந்தகுமாரின் தாய் மீனா பிளேடால் தனது கையை கிழித்துக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட, ‘’எனது மகனை வெளியை விடவேண்டும்’ என்று கூச்சல் போட்டுள்ளார். அவரை அங்கிருந்த போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக மீனா, நந்தகுமாரின் மனைவி லட்சுமி மற்றும் சிலர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
