- திமுகா
- மாணிக்கம்
- தாகூர்
- திருச்சி
- சமாஜ்வாடி
- காங்கிரஸ்
- மணிகாம் தாகூர்
- முரளிகிருஷ்ணன்
- மன்பரயா
- ட்ரிகி எஸ்பி
- செல்வா நாகரட்டன்
திருச்சி: திமுக மீது பொய் பிரசாரம் செய்வதால் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி எஸ்பியிடம் வக்கீல் மனு அளித்துள்ளார். திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினத்திடம் மணப்பாறையை சேர்ந்த வக்கீல் முரளி கிருஷ்ணன் நேற்று புகார் மனு அளித்தார். அதில், திமுகவில் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறேன். கடந்த 24ம்தேதி மாலை 3 மணியளவில் செய்தி சேனல் ஒன்றை பார்த்து கொண்டிருந்தேன்.
அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் திமுகவையும், இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் குறித்தும் ஆதாரமற்ற, உண்மைக்கு முற்றிலும் புறம்பான அவதூறு மற்றும் திட்டமிட்டு அரசியல் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் வேண்டும் என்றே அவதூறுகளை பரப்பினார். அதிமுக, திமுக இணைந்து விரைவில் பாஜவுடன் கூட்டணி அமைக்கவுள்ளது என்று பொய்யான கற்பனை செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை பொது வெளியில் பரப்புகிறார்.
இது திமுகவின் நிர்வாகிகள், தொண்டர்களிடையே குழப்பம் மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தொண்டர்கள் மத்தியில் வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்பி வருகிறார். எவ்வித ஆதாரமின்றி தொடர்ந்து திமுக மற்றும் அதன் தலைவர்களை இழிவுபடுத்தி பேசுவது என்பது அரசியல் விமர்சனத்தை தாண்டி திட்டமிட்ட அவதூறு பிரசாரமாகும். பொது அமைதியை சீர்குலைக்கும் செயலாகும்.
இது சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் பரவி திமுகவுக்கு எதிரான தவறான எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. இதன்மூலம் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களிடம் அரசியல் பகைமை, சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகும் வகையில் திட்டமிட்டு அவதூறான பொய்களை பரப்பி வரும் எம்பி மாணிக்கம் தாகூர் மீது அவதூறு மற்றும் குற்ற வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
