×

எம்எல்ஏ இல்லாத தொகுதிக்கு இனி நாங்க தான் எம்எல்ஏ: பெருந்துறையில் வசூல் வேட்டைக்கு தயாரான தவெகவினர்

 

பெருந்துறை: எம்எல்ஏ இல்லாத ஊரில் இனி நாங்கள் தான் எம்எல்ஏ என பெருந்துறை பகுதியில் தவெகவினர் வசூல் வேட்டையை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயக்குமார். இவர் தொகுதி பக்கம் வராமலேயே தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெக கட்சியில் இணைந்து விட்டார். இதனால் தற்போது பெருந்துறை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தவெக கட்சியை சேர்ந்த சிலர் டாஸ்மாக் கடை பார்களில் எப்படி வசூல் செய்வது என பலரிடம் ஆலோசனை கேட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து, டாஸ்மாக் கடைகளுக்கு நொறுக்கு தீனிகள் சப்ளை செய்யும் வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘நான் பெருந்துறை பகுதியில் உள்ள சில மதுபான கடை பார்களுக்கு நொறுக்கு தீனிகள் சப்ளை செய்து வருகிறேன். தவெக கட்சியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் என்னை சந்தித்து, டாஸ்மாக் கடைகளில் இருந்து ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மாமூல் கொடுப்பதாக சொன்னார்கள். மாமூலை டாஸ்மாக் விற்பனையாளர் கொடுப்பாரா? அல்லது பார் உரிமையாளர் கொடுப்பாரா என்பது எங்களுக்கு தெரியவில்லை.

அதனால் நாங்கள் யாரை பார்த்து மாமூல் கேட்க வேண்டும்? எந்தெந்த நாட்களில் கேட்க வேண்டும்? எவ்வளவு தொகை கொடுப்பார்கள்? என்பதை எங்களுக்கு சொல்லுங்கள்’’ என பரிதாபமாக அந்த இளைஞர்கள் கேட்டதாக தெரிவித்தார். ‘‘இதெல்லாம் தெரியாமலா ஆட்சிக்கு வந்தீர்கள்’’ என நான் கேட்டேன். அதற்கு அந்த இளைஞர்கள், ‘‘இப்படி திடீர்னு விஜய் ஆட்சிக்கு வருவார் என நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. அதனால் தான் எங்களுக்கு எதுவும் தெரியவில்லை.

தற்போது எம்எல்ஏவே இல்லாத ஊரில் நாங்கள் தான் இனி எம்எல்ஏவாக செயல்பட வேண்டியதாக உள்ளது. எங்கெங்கு சென்றால் மாமூல் கொடுப்பார்கள் என்பதை எங்களுக்கு சொல்லுங்கள்’’ என கெஞ்சி கேட்டனர். இந்த இளைஞர்கள் அனைவரும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் போல் தெரிந்தனர். இது எங்கே போய் முடியும் என தெரியவில்லை என நொறுக்கு தீனி விற்பனையாளர் புலம்பி தள்ளினார்.

Tags : MLA ,Thavekas ,Perundurai ,Jayakumar ,AIADMK ,
× RELATED இதுவரை 4.6 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்