×

அமைச்சரவையில் சேர்க்க விஜய் மறுப்பு எதிரொலி; எடப்பாடியுடன் வேலுமணி ஆதரவாளர்கள் சமரசம்: சபாநாயகரைச் சந்தித்து புகாரை வாபஸ் பெற்றனர்

சென்னை: தவெக அமைச்சரவையில் இடம் தராததால் விரக்தியடைந்திருந்த வேலுமணி ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிச்சாமியுடன் சமரசம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இரு தரப்பும் சபாநாயகரை சந்தித்து அவரிடம் கொடுத்த மனுவை வாபஸ் பெற்றனர்.

தமிழக தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அவர்களால் தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைச்சரவையை அமைத்துள்ளது. அதேநேரத்தில் 10 ஆண்டுகள் ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த திமுகவையே சொல்லாமல், கொள்ளாமல் ஓடி வந்த காங்கிரசை நம்பாத விஜய், அதிமுகவை உடைக்க திட்டமிட்டார். இதற்காக தொழில் அதிபர் அபினேஷ் அழைக்கப்பட்டு அவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதன்படி வேலுமணியிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் 30 எம்எல்ஏக்களை தனி அணியாக அழைத்து வந்து அதிமுக நாங்கள்தான் என்று நிரூபிக்கிறோம். எங்களுக்கு 12 அமைச்சர் பதவி வேண்டும் என்றனர். கடைசியில் 7 அமைச்சர் பதவி தர சம்மதம் தெரிவிக்கப்பட்டது. 12 பேருக்கு வாரிய தலைவர் பதவி தரவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் உள்ளதால் அவர்களை அமைச்சரவையில் சேர்க்க கடும் எதிர்ப்பு எழுந்தது. தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் வேலுமணி ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க விஜய் மறுத்து விட்டார்.

அதோடு வேலுமணியின் போனை பல முறை எடுக்காமல் இருந்தார் விஜய். அதோடு அமைச்சரவையில் 35 பேர் மட்டுமே இடம் பெற முடியும். அதன்படி 35 பேரையும் விஜய் சேர்த்து விட்டார். இதனால் தன்னை திட்டமிட்டு விஜய் பழிவாங்கிவிட்டதாக வேலுமணி கருதினார். இதனால் எடப்பாடி பழனிச்சாமியிடம் சமரசம் செய்ய முடிவு செய்தார். அதன்படி இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று மாலை நேரடியாக நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, ஹரி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது மீண்டும் பழைய பதவிகளை வழங்க வேண்டும். சபாநாயகரிடம் கொடுத்த கடிதத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டன.

அப்போது உடனடியாக பதவியை மீண்டும் தர முடியாது. தகுதியானவர்களுக்கு மட்டுமே பதவி தர முடியும். அதேநேரத்தில் சபாநாயகரிடம் கொடுத்த கடிதத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இன்று காலையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சி.வி.சண்முகத்தின் வீட்டில் வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் லீமா ரோசும் கலந்து கொண்டார். அப்போது இரு அணியையும் ஒன்று சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஓரிரு நாளில் இருவரும் ஒன்று சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இரு அணியினரும் சபாநாயகரை சந்தித்து அவரிடம் கொடுத்த கடிதத்தை வாபஸ் பெற்றனர்.

அதிமுகவை உடைத்த லீமா ரோஸ்
அதிமுகவில் இருந்து இதுவரை 4 எம்எல்ஏக்கள் தவெக அணிக்கு தாவியுள்ளனர். இவர்களை ஆதவ் அர்ஜூனாதான் இழுப்பதாக கூறப்படுகிறது. இதற்கு உதவியாக இருப்பது அவரது மாமியார் லீமா ரோஸ்தான். அவர்தான் அதிமுகவில் பணத்துக்காக ஆசைப்படும் எம்எல்ஏக்கள் யார் என்ற பட்டியலை ஆதவிடம் வழங்குகிறார். அதோடு அந்த எம்எல்ஏக்களையும் லீமா ரோஸ்தான் தனியாக அழைத்துப் பேசுகிறார். அவர்களிடம் பண பேரத்தையும் அவர்தான் பேசுவதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் பண பேரம் முடிந்ததும், ஆதவிடம் அனுப்புகிறார். அவர் விஜயிடம் பேசி ஒப்புதல் பெறுகிறார் என்கின்றனர் அதிமுக தலைவர்கள்.

நேற்று இரவு 3 அதிமுக எம்எல்ஏக்களை சவேரா ஓட்டலுக்கு அழைத்து லீமா ரோஸ் பேசியுள்ளார். அவர்களுக்கான பண பேரத்தை லீமா ரோஸ் முடித்து விட்டார். இதனால் அவர்கள் 3 பேரும் விரைவில் தவெகவில் சேருவார்கள் என்று கூறப்படுகிறது. இது தெரியாமல், நாங்கள் 40 ஆண்டுகள் அரசியல் செய்கிறோம் என்று பேசும் அதிமுகவினர் லீமா ரோசை அருகில் வைத்துக் கொண்டே, கட்சியை உடைப்பது, பின்னர் சேர்ப்பது என்று எல்லா பிரச்னைகளையும் பேசுகின்றனர் என்கின்றனர் விவரம் அறித்த அதிமுகவினர்.

Tags : VIJAY ,VELUMANI ,EDAPADI ,Chennai ,Daveka ,Eadapadi Palanichami ,Speaker ,Tamil Nadu ,Taweka ,
× RELATED அரசு உணவகங்களில் ரூ.5க்கு மீன்...