சென்னை: மாநில பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரே, வேந்தராக செயல்படுவது என்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்ட கொள்கை முடிவு என்று அதிமுக நினைவு கூர்ந்துள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, முதல்வரே பல்கலைக்கழக வேந்தராக இருக்க வேண்டும் என்பது முந்தைய அரசின் நிலைப்பாடு என்றும், அதை தொடர வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் பேசினார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகிறர்கள். இந்த நிலையில் இந்த கருத்து முதலமைச்சரின் ஒப்புதலோடு தான் பேசப்பட்டதா என்று அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஐடி விங் பேஜில், உச்சநீதிமன்ற உத்தரவு பெற்ற பிறகு, அதனை மீறி, மாநில உரிமைகளை அடகு வைக்கத் துடிக்கும் த.வெ.க கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அமைச்சரின் பேச்சு கடும் ஆட்சேபத்திற்குரியது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திராவிட இயக்க ஆட்சி தமிழ்நாட்டிற்கு என கட்டமைத்த உயர்தனிக் கூறுகளை இன்றைய பொய்க்கால் குதிரை அரசு கூறுபோட்டு சிதைக்க முயல்வது, மாநில உரிமைகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம்.
பல்கலைக்கழக நிர்வாகத்திலும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி நலனிலும் அக்கறையின்றி, தங்களின் சுயநல அரசியலுக்காக கொள்கைகளை மாற்றி மாற்றி பேசும் இந்த பொய்க்கால் குதிரை அரசை என்னவென்று விமர்சிப்பது! ஏனென்றால் தன்னை விமர்சித்தால், ஏன் விமர்சிக்கிறார்கள், எதற்கு விமர்சிக்கிறார்கள் என அவர்களுக்கு புரிய வேண்டும் அல்லவா! ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று அதிமுக கடுமையாக சாடி உள்ளது.
