கோபி,மே16: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோபியில் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.14 வரை விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட விலையை குறைக்க வலியுறுத்தியும், சிபிஐ இயக்குநரின் பதவி காலத்தை ஓராண்டிற்கு நீட்டித்ததை கண்டித்தும் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கோபி பேருந்து நிலையத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பி.உதயகுமரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இதில்மாவட்ட முன்னாள் தலைவர் சரவணன், முன்னாள் நகராட்சி தலைவர் நல்லசாமி, கோபி வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் இந்துஜா வெங்கடாசலம், நிர்வாகி செந்தில்குமார், இளைஞர் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் கோதண்டன்,வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபாகரன் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
