சத்தியமங்கலம், மே 20: தாளவாடி மலை பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்ததால் சாலைகள் மற்றும் நீரோடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், நீரோடைகள் மற்றும் பள்ளங்களிலும் செந்நிற மழைநீர் பெருக்கெடுத்து ஓடி காட்டாற்றில் கலந்தது. வனப்பகுதியிலும் பரவலாக மழை பெய்ததால் வனவிலங்குகளின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. கன மழை பெய்ததால் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
