கிருஷ்ணகிரி, மே 23: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள விவசாய கடன், வட்டியும் முதலுமாய் கட்டும் நிலையில் உள்ளது. பழைய முறைப்படி வட்டி மட்டும் கட்ட வேண்டும் என மாற்றி அமைக்க வேண்டும். வெட்டி வேர் வளர்ப்பதற்கு பயிற்சி, அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளாளப்பட்டியில் கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும்.
அரசு மானியத்தில் தென்னை மற்றும் மாவிற்கு சொட்டு நீர் பாசனம் நிரந்தரமாக அமைக்க பிவிசி குழாய்கள் வழங்க வேண்டும். சூளகிரி பகுதியில் புதினா, பூக்களுக்கு தனி சந்தை அமைத்து தர வேண்டும். எண்ணேக்கொள் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் முழுமைபெறவில்லை. இத்திட்ட பணிகளை விரைந்து முடிப்பதுடன், கால்வாய் அமைக்க எடுக்கப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். கரடிஅள்ளி அருகே தேவர்முக்குளம் ஏரியில் அனுமதியின்றி 25 அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மண் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு அபராதத்துடன் வசூல் செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள தனியார் உர விற்பனைக்கடைகளில் யூரியாவுடன் இணைப்பு உரங்களை வழங்குவதை தடுக்க வேண்டும்.
குறைதீர் கூட்டத்தில் அளிக்கும் மனுக்களில், அலுவலர்களுக்கு தங்களுக்கு சாதகமான மனுக்களை மட்டுமே ஏற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். பாம்பாறு அணை பாசன கால்வாய்கள் தூர்வார நிதி ஒதுக்க வேண்டும். தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் மற்றும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். ஏரி, குளம், குட்டை உள்ளிட்டவை நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றி, தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.
இதற்கு பதிலளித்து கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது: வெள்ளாளப்பட்டியில் 3000 கால்நடைகள் இருக்கும் பட்சத்தில், அங்கு கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதினா, பூக்களுக்கு தனி சந்தை அமைக்க, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
எண்ணேகொள் கால்வாய் திட்ட பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதால், விரைந்து முடிக்கப்படும். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற தொடர்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். குறைதீர் கூட்டத்தில் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பேச வேண்டும். சாலை, குடிநீர், பேருந்து உள்ளிட்ட கோரிக்கைகளை குறித்து தனியாக மனுவாக அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பாம்பாறு அணை பாசன கால்வாய் 30 கி.மீ தூரம் உள்ளது. இக்கால்வாய் சீரமைக்க ரூ.4 லட்சம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
