ஒட்டன்சத்திரம், மே 22: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டை பகுதியில் நேற்று காலை 8.40 மணியளவில் திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்டது. சில நிமிடங்கள் நீடித்த இந்த அதிர்வு போன்ற சத்தம் காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த அச்சமடைந்தனர். மேலும் வீட்டில் உள்ள பாத்திரங்களும் அதிர்ந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர். வெடிச்சத்தம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த திடீர் சம்பவத்தால் இடையகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவும் இந்த வெடிச்சத்தம் கேட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் விரைவாக உண்மை நிலையை விளக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
