போடி, மே 20: போடி அருகே ரூ. 1 கோடி மதிப்பீட்டில் திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் சுமார் 16,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு ரெங்கநாதபுரம், கிருஷ்ணாநகர், பாலாஜி நகர், கரட்டுப்பட்டி, மேல சொக்கநாதபுரம், கீழ சொக்கநாதபுரம், முதல்வர் காலனி, வினோபாஜி காலனி, தர்மத்துப்பட்டி உள்ளிட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு உப்புக்கோட்டை முல்லைப் பெரியாற்றில் உறைகிணறு அமைத்து அதில் சேகரமாகும் குடிநீர் எடுத்தும், போடி மேற்கு கரட்டுப்பட்டி சாலையில் உள்ள மங்களக்கோம்பை ஊற்றுப்பகுதியிலும் குடிநீர் எடுத்து பொதுமக்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து இப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் புதிய குடிநீர் திட்டம் தேவை என கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி கடந்த திமுக அரசு ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்து புதிய திட்டத்தின் வாயிலாக அதற்கான குழாய்கள் பதிக்கும் பணிகள் துவங்கி அனைத்தும் நிறைவடைந்துள்ளது.
