தரங்கம்பாடி, மே 16: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே கன்னங்குடி கிராமத்தில் உள்ள தான்தோன்றி வரசித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தரங்கம்பாடி அருகே கன்னங்குடி கிராமத்தில் தான்தோன்றி வரசித்தி விநாயகர் கோயில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 13ம் தேதி தொடங்கப்பட்டது. தொடர்ந்து 2ம் கால யாக பூஜைகள் முடிவடைந்தது.
நேற்று காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு தமிழ் வேள்வி முறைப்படி மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோயில் வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன. சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர். மற்றும் கண்ணங்குடி கிராம மக்கள் செய்திருந்தனர்.
