வேலூர், மே 23: பள்ளிகொண்டா மலையடிவாரத்தில் கஞ்சா விற்ற சென்னை வாலிபரை கைது செய்த போலீசார், ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி மாலையடிவாரத்தில் நேற்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தர்மன் மற்றும் போலீசார் அந்தப் பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மலையடிவாரத்தில் இருந்து ஒரு சில நபர்கள் வந்து கொண்டிருந்தனர்.
அந்த வழியை நோட்டமிட்டு போலீசார் சென்று பார்த்த போது வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் சுற்றி வளைத்து அந்த வாலிபரை பிடித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில், அவர் சென்னை கொளத்தூர் சிவசக்தி நகர் 2வது தெருவை சேர்ந்த பச்சையப்பன் மகன் ஜெகதீசன்(41) என தெரிய வந்தது. இவர் ரயில்களில் பயணம் செய்பவர்களிடத்தில் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவைகளை திருடிவந்து விற்பனை செய்து பிழைப்பை நடத்தி வந்ததாகவும்,
கஞ்சா விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பள்ளிகொண்டாவில் விற்பனை செய்து கொண்டிருந்தேன் என விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 1.5 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர்.
