தூத்துக்குடி, மே 23: தூத்துக்குடியில் ஓடும் ரயிலில் டெய்லரிடம் நகை, பணம் பறித்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மோதிரம், செல்போன் மீட்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி ராஜிவ் நகரை சேர்நதவர் மரிய அமலதாஸ்(55). இவர், கோவையில் டெய்லராக வேலை செய்து வருகிறார். கடந்த 18ம் தேதி கோவையில் இருந்து ரயிலில் ஊருக்கு புறப்பட்டு வந்தார். மணியாச்சியில் இறங்கி அங்கிருந்து தூத்துக்குடிக்கு வரும் பாசஞ்சர் ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த ரயில், அதிகாலை தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
அப்போது மரியஅமலதாஸ் இருந்த பெட்டிக்குள் மர்ம ஆசாமிகள் 4 பேர் திடீரென ஏறினர். அவர்கள் அங்கிருந்த மரியஅமலதாசை மிரட்டி அவர் கையில் அணிந்து இருந்த 4 கிராம் மோதிரம், ரூ.300 பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து மரியஅமலதாஸ் தூத்துக்குடி ரயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதில் வழிப்பறியில் ஈடுபட்டது தாளமுத்துநகர் புதிய முனியசாமிபுரத்தை சேர்ந்த அருணாசலம் மகன் கணேசன்(22), சுடலையாபுரத்தை சேர்ந்த மாடசாமி மகன் வசந்தகுமார்(24), ராமலிங்கம் மகன் ராஜலிங்கம்(23), சோட்டையன்தோப்பு மாரிமுத்து மகன் முத்துக்குமார்(23) என்பது தெரிய வந்தது. இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மோதிரமும் மீட்கப்பட்டது. மேலும் இவர்கள் மற்றொருவரிடம் இருந்து பறித்த செல்போனும் மீட்கப்பட்டது.
