திருவண்ணாமலை, மே 23: திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறித்து தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு, அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தும் நோக்கில் மாவட்ட காவல்துறையினரால் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், கடந்த மூன்று நாட்களாக மாவட்டம் முழுவதும் சிறப்பு சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் போது, சுமார் 250க்கும் மேற்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் நேரடியாக சோதனை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 14 நபர்களை கைது செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் வகையிலான எந்தவித சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடக்கூடாது எனவும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தேவையான பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. குற்றச்செயல்கள் மற்றும் சமூக விரோத செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில், திருவண்ணமலை மாவட்ட காவல்துறையினரின் கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
