அறந்தாங்கி, மே 13: அறந்தாங்கியில் இருந்து நேரடியாக சிவகாசிக்கு பேருந்து இயக்கவேண்டுமென வியாபாரிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களின் தேவைகளை நாடி அடிக்கடி பட்டாசு நகரம் சிவகாசிக்கு சென்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு நாள்தோறும் அடிக்கடி பட்டாசு, பிரிண்டிங் மேலும் டைரிகள் தினசரி மற்றும் மாத காலண்டர்கள், திருமண அழைப்பிதழ்கள், பத்திரிகைகள் நோட்டீஸ்கள் மற்றும் போஸ்டர்கள் ஆர்டர் கொடுக்கவும் வாங்கி வரவும் உள்ளிட்ட பல்வேறு தொழில் தொடர்பாக சிவகாசிக்கு சென்று வருகின்றனர்.
அறந்தாங்கியில் சிவகாசி செல்பவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அறந்தாங்கியில் இருந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிவகாசிக்கு பேருந்து தினசரி இயக்க வேண்டுமென வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
