திருப்பூர், மே 9: திருப்பூர் குமரன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வந்தது. அந்த நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற டிரைவர் நவீன் திரும்பி வந்து பார்த்தபோது ஆம்புலன்சை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்றுவிட்டார்.
இதுதொடர்பாக அவர் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். இதனிடையே திருடு போன ஆம்புலன்ஸ் பல்லடம் ரோட்டில் மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்ற போலீசார் ஆம்புலன்சை திருடி சென்ற தென்காசியை சேர்ந்த ஹரீஷ் (35) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் இவர் மீது, திருப்பூர் ஜூடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் மாஜிஸ்திரேட் செந்தில் ராஜா நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அதில், ஆம்புலன்சை திருடி சென்ற ஹரீசுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
