காங்கயம், மே 14: காங்கயம்-தாராபுரம் பிரதான சாலையில் கடந்த சில மாதங்களாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சாலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம் நாளடைவில் ஆழமான குழிகளாக மாறி வருகிறது. எனவே, இதன் வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி தடுமாறி செல்கின்றன. இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழுவதும், அருகே செல்லும் வாகனத்தின் மீது மோதுவதுமாக நிலை ஏற்படுகிறது.
இதனால், இருசக்கர வாகனத்தில் செல்லும் முதியவர்கள், பெண்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலை வழியாக தினமும் அதிகமான இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பயணம் செய்வதால், விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.
பலமுறை வாய்மொழியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை நிரந்தர தீர்வு எடுக்கப்படவில்லை எனவும், பலமுறை சீரமைப்பு பணிகள் மேற்கண்ட போதும் முழுமையாக தீர்வு காணப்படாமல் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் சேதமடைந்த சாலையை உடனடியாக ஆய்வு செய்து சீரமைக்கும் நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
