பெரும்புதூர், மே 9: தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததையும், ஒன்றிய பாஜ அரசு சூழ்ச்சி செய்வதாக குற்றம் சாட்டியும் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நேற்று பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அருள்ராஜ் தலைமை தாங்கினார். இதில், 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையை நிரூபித்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டியிருந்த நிலையில், அதனை செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாகவும், விஜய் தலைமையிலான ஆட்சியை அமைப்பதில் ஒன்றிய பாஜ அரசு சூழ்ச்சி செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், பெரும்புதூரிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
