செங்கல்பட்டு, மாமல்லபுரத்துக்கு இயக்கப்படுவதுபோல் சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுமா?

காஞ்சிபுரம், ஏப்.30: செங்கல்பட்டு, மாமல்லபுரத்துக்கு இயக்கப்படுவதுபோல் சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேரடி பேருந்து சேவை இல்லாததால் தாம்பரம், பூந்தமல்லிக்குச் சென்று, அங்கிருந்து காஞ்சிபுரம் பேருந்துக்கு மாற வேண்டிய கட்டாயம் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர் பரப்பளவு சமீபத்தில் 1,189 சதுர கிலோ மீட்டரிலிருந்து 5,904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் சென்னை பெருநகர் எல்லைக்குள் இணைக்கப்பட்டுள்ளன.

இதனால், காஞ்சிபுரம் நகரம் தற்போது சென்னை பெருநகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகவும், சென்னை புறநகர் பகுதியாகவும் மாறியுள்ளது. சென்னை ஆட்டோ பெர்மிட்களின் எல்லையும் காஞ்சிபுரம் வரை விரிவாக்கம் செய்து சென்னை ஆட்டோக்கள், காஞ்சிபுரம் வரை இயக்க போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் பேருந்து சேவைகள், பல புதிய பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு இருந்தாலும் காஞ்சிபுரம் வரை மாநகர் பேருந்து சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. தற்போது சென்னை மாநகர் பேருந்துகள், வாலாஜாபாத் மற்றும் சுங்குவார்சத்திரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இவ்விரு பகுதிகளும் காஞ்சிபுரத்திற்கு மிகவும் அருகில் அமைந்துள்ளதால், காஞ்சிபுரம் வரை பேருந்து சேவையை நீட்டிப்பது பொதுமக்களுக்கு பெரும் நன்மை அளிக்கும். காஞ்சிபுரம் இந்திய அளவில் புகழ்பெற்ற கோயில் நகரமாகவும், உலகப் புகழ் பெற்ற பட்டு உற்பத்தி மையமாகவும் விளங்குகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சென்னை மற்றும் காஞ்சிபுரம் இடையே பயணம் செய்து வருகின்றனர். மேலும், சென்னை தலைமை செயலகம் மற்றும் பிற முக்கிய அரசு அலுவலகங்களில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால், காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல போதுமான ரயில் வசதியோ அல்லது நேரடியான மாநகர் பேருந்து சேவையோ இல்லாத காரணத்தால் பொதுமக்கள் தாம்பரம், பூந்தமல்லி போன்ற இடங்களுக்குச் சென்று, அங்கிருந்து மற்ற போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் நேர விரயம், கூடுதல் செலவு மற்றும் தேவையற்ற சிரமங்கள் பொதுமக்களுக்கு ஏற்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு சென்னை மாநகர பேருந்து சேவை கிடைத்தால் சென்னைக்கு தினமும் பணிக்கு சென்று வருவோர்க்கு பஸ் பாஸ் வசதியும் கிடைக்கும்.

ஏற்கனவே செங்கல்பட்டு, திருவள்ளூர், மாமல்லபுரம் போன்ற பெருநகர பகுதிகளுக்கு சென்னை மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வரும்போது, காஞ்சிபுரத்திற்கு மட்டும் இயக்கபடாமல் விதிவிலக்காக உள்ளது. மேலும், கடந்த காலத்தில் சென்னை தி.நகரிலிருந்து காஞ்சிபுரம் வரை மாநகர ஏசி பேருந்து சேவை இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்து சேவை காஞ்சி மக்களுக்கு ஒரு வரபிரசாதமாக இருந்தது. பின்னர் அந்த சேவை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்தநிலையில், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வக்கீல் பெர்ரி, மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிரபு சங்கருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறுகையில், சென்னை பெருநகர் காஞ்சிபுரம் வரை விரிவடைந்து இருந்தாலும், மற்ற பகுதிகள் சென்னை பெருநகரின் வசதிகளையும், அந்தஸ்தையும் பெற்று வரும்போது காஞ்சிபுரத்திற்கு மட்டும் இது கிடைக்காமல் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது வாலாஜாபாத் மற்றும் சுங்குவார்சத்திரம் வரை இயங்கும் சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளை காஞ்சிபுரம் வரை நீட்டித்து இயக்குவதற்கும், காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நகரின் முக்கிய பகுதிகளுக்கு நேரடி மாநகர பேருந்து சேவைகளை விரைவில் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Related Stories: