மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது

 

மதுராந்தகம், மே 9: மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலத்துறையில் ஊர்நல அலுவலராக பணியாற்றுபவர் விஜயலட்சுமி (50). இந்தநிலையில், அரியனூர் கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் போடப்பட்டிருந்த வைப்புத் தொகையை ரினியூவல் செய்வதற்காக ஊர்நல அலுவலர் விஜயலட்சுமியை அணுகியுள்ளார்.
அப்போது அவர் இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் போடப்பட்டிருந்த வைப்புத் தொகையை ரினியூவல் செய்ய ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இதில், லஞ்சம் கொடுக்க மறுத்த மகாலட்சுமி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் நேற்று மகாலட்சுமியிடம் செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர்கள் திருவேங்கடம் மற்றும் சக்கரபாணி ஆகியோர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பியுள்ளனர். பின்னர் அவர் விஜயலட்சுமியிடம் ரசாயனம் தடவிய ரூ.1000ஐ கொடுத்தபோது, லஞ்சம் வாங்கிய அலுவலர் விஜயலட்சுமியை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: