குன்றத்தூர், மே 7: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு குடிநீர் தேவைக்கும், திருப்பதி மாவட்டத்தில் பாசனத்திற்கும் தினமும் 1,400 கனஅடி வீதம் தண்ணீரை வெங்கடகிரி எம்.எல்.ஏ. குருகொண்டலா ராமகிருஷ்ணா நேற்று திறந்து வைத்தார். முன்னதாக கண்டலேறு நீர்த்தேக்கத்தில் கங்கை பூஜை செய்து அணையில் நீர்க்கட்டுப்பாட்டு கருவியை இயக்கி தண்ணீரை திறந்துவிட்டார்.
அப்போது எம்எல்ஏ பேசுகையில், ‘சென்னை, திருப்பதி, காளஹஸ்தி, வெங்கடகிரி மற்றும் ராபூர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகளின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக, கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து 13 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தற்போது கண்டலேறு அணையில் 43 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அதில் 5 டிஎம்சி சென்னை குடிநீர் மற்றும் ரபி இரண்டாம் பயிருக்காகவும், மேலும் 8 டிஎம்சி தண்ணீர் திருப்பதி, காளஹஸ்தி மற்றும் வெங்கடகிரி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மக்களின் தொழில்துறை தேவைகளுக்காகவும் திறந்துவிடப்படுகிறது. தினமும் 1,400 கனஅடி தண்ணீர் வெளியிடப்படும். ஒவ்வொரு துளி நீரையும் மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்.
