புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி

 

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனை ரங்கசாமி நேற்று சந்தித்து, முதல்வர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேஜ கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதில் என்ஆர் காங்.,- 12, பாஜ-4, அதிமுக-1, லஜக-1 என 18 இடங்களில் தேஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்ற சுயேச்சை எம்எல்ஏ விக்னேஸ்வரன் பாஜவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் தேஜ கூட்டணி பலம் 19 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ரங்கசாமி 5வது முறையாக முதல்வராக விரைவில் பதவி ஏற்கவுள்ளார். இதற்கிடையே பாஜவுக்கு கடந்த முறைபோல் 2 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என்று அக்கட்சி மேலிட பொறுப்பாளர்கள் புதுவையில் முகாமிட்டு வலியுறுத்தி வருகின்றனர். கடந்த முறை 6 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜ, தற்போது 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஒரு அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர் பதவி மட்டுமே கொடுக்க முடியும்.

2 அமைச்சர்கள் வேண்டும் என்றால், தங்களுக்கு 2 நியமன எம்எல்ஏ பதவியை வழங்க வேண்டும் என்று பாஜ தலைமைக்கு முதல்வர் ரங்கசாமி நிபந்தனை விதித்துள்ளார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், 15வது சட்டப்பேரவை நேற்று முன்தினம் கலைக்கப்பட்டது. இதனால் ரங்கசாமி தனது முதல்வர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என்றும், புதிய ஆட்சியை அமைப்பதற்கான உரிமை கோருவார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், நேற்று காலை புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனை முதல்வர் ரங்கசாமி சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கவர்னரை சந்தித்த பின் நிருபர்களிடம் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், ‘‘ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் வழங்கியுள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டம் முடிந்த பிறகு ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோருவேன். மேலும், தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க எனது வாழ்த்துகள்’’ என்றார்.

 

Related Stories: