சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி துவங்கி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த தேர்வில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர்.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6 முதல் 20-க்குள் முடிக்கப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நிறைவடைந்த நிலையில் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வில் மொத்தம் 95.2%பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 97 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.1 சதவீதம் பேரும் இந்த பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 7,536 மேல்நிலைப் பள்ளிகளில் 2,639 பள்ளிகள் 100% தேர்ச்சியை காட்டி இருக்கின்றன. . இதில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அடங்கும். அதே நேரம் 5,170 பள்ளிகள் 95% தேர்ச்சியை காட்டி இருக்கின்றன. அதே போல 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 489-ஆக உள்ளது. 95% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,572 ஆகும்.
பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவிதம் கீழே:
1.அரசுப் பள்ளிகள் – 92.16% தேர்ச்சி
2. அரசு உதவி பெறும் பள்ளிகள் – 96.14% தேர்ச்சி
3. தனியார் சுயநிதிப் பள்ளிகள் – 98.72% தேர்ச்சி
4. இருபாலர் பள்ளிகள் – 95.30% தேர்ச்சி
5. பெண்கள் பள்ளிகள் – 97.08% தேர்ச்சி
6. ஆண்கள் பள்ளிகள் – 90.49% தேர்ச்சி
பெண்கள் பள்ளிகள், ஆண்கள் பள்ளிகளை விட 6.59% சதவீதம் கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 4.81% சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
